பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்யும் பணியில், மேஜை விழுந்து கால் விரல் துண்டான மாணவனுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை கீழ உறப்பனூரைச் சேர்ந்த பி.ஆதிசிவன் என்பவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.
அதில், ‘என் மகன் சிவநிதி, திருமங்கலம் பகுதியிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 2015-ல் 8-ம் வகுப்பு சி பிரிவில் படித்து வந்தார். 24.6.2015-ல் வகுப்பாசிரியர் மாணவர்களை வகுப்பறையை சுத்தம்செய்ய வைத்துள்ளார். அப்போது மேஜை விழுந்ததில் சிவநிதியின் இடது கால் பெருவிரலுக்குப் பக்கத்து விரல் துண்டானது. என் மகன் ராணுவத்தில் சேர விரும்பிப் படித்து வந்தார். கால் விரல் துண்டானதால் அவரது கனவு நிறைவேறாமல் போய்விட்டது. இதற்கான உரிய இழப்பீட்டை வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், ‘தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக புகார்கள் வருகின்றன. பள்ளி நிர்வாகத்தின் மெத்தனத்தால், மனுதாரின் மகனின் காலில் ஒரு விரல் துண்டாகியுள்ளது. இதனால் மனுதாரருக்கு அரசு 4 வார காலத்தில் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
தமிழகத்தின் பள்ளிகளில் வகுப்பறை, கழிப்பறை சுத்தம் செய்யும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படாமல் இருப்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதிசெய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும்’ என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.