யூடியூபர் மாரிதாஸ் மீது மேலப்பாளையம் போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
முப்படைத் தளபதி பிவின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தது தொடர்பாக ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்டதாக, யூடியூபர் மாரிதாஸ் மீது மதுரை சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.
இதனிடையே, தனியார் டிவி நிறுவனம் அனுப்பியதுபோல் போலி மின்னஞ்சல் அனுப்பியதாக சென்னையில் அளிக்கப்பட்ட புகாரிலும், கரோனா முதல் அலை பரவலின்போது தமிழகத்தில் கரோனா பரவல் அதிகாரிக்க ஒரு குறிப்பிட்ட மதத்தினர்தான் காரணம் என வீடியோ வெளியிட்டதாக, மேலப்பாளையம் போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் பேரிலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார்.
இதில் மேலப்பாளையம் போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாரிதாஸ் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு விசாரணை முடிந்த நிலையில், மாரிதாஸ் மீது மேலப்பாளையம் போலீஸார் பதிவுசெய்த வழக்கை ரத்துசெய்து நீதிபதி உத்தரவிட்டார்.