தமிழகத்தில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்து, வழக்குகள் கைவிடப்பட்டுள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால், ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு, ஆன்லைன் மூலமாகவே தேர்வுகளும் நடத்தப்பட்டன. அடுத்து தமிழகத்தில் கரோனா பரவலின் தாக்கம் குறைந்து வருவதால், மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.
இதனால் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடித் தேர்வை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் கல்லூரி மாணவர்களோ, ‘நேரடித் தேர்வுகள் நடத்தக்கூடாது, ஆன்லைன் தேர்வுகளே நடத்தப்பட வேண்டும்’ என்று பல மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழகம் முழுதும் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மீது, அத்துமீறிப் போராட்டத்தில் ஈடுபட்டதாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
அதன்படி மதுரையில் 9 வழக்குகளும், கல்லக்குறிச்சி, சென்னை, திருச்சி மாவட்டத்தில் தலா ஒரு வழக்குகள் என மொத்தம் 12 வழக்குகள் காவல் துறையால் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகள் குறித்துப் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யுமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில் மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 12 வழக்குகளும் மேல்நடவடிக்கை எடுக்காமல் கைவிடப்படுவதாக, தமிழகக் காவல் துறை அறிவித்துள்ளது.