சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு


ஜெயராஜ், பென்னிக்ஸ்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை முடிப்பதற்கு கீழமை நீதிமன்றத்துக்கு 5 மாதம் கூடுதல் அவகாசம் வழங்கி, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த 2020 ஜூன் 19-ல், கரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு நேரம் கடந்து கடையைத் திறந்து வைத்திருந்ததாக, இருவரையும் சாத்தான்குளம் போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

காவல் நிலையத்தில் இருவரும் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். பின்னர் பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ விசாரித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் காவலர்கள் என 9 பேரை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தது.

இந்த வழக்கு, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இந்நிலையில் விசாரணையை முடிக்க கூடுதல் அவகாசம் கேட்டு, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கரோனா ஊரடங்கு காரணமாக விசாரணையை 6 மாதத்தில் முடிக்க முடியவில்லை. எனவே, அவகாசம் வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன்பு கடந்த 13-ம் தேதி விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில், ‘இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட செல்போன் உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள் தடய அறிவியல் பரிசோதனைக்காக குஜராத் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் ஆய்வு முடிவுகள் இன்னும் வரவில்லை. அந்த மின்னணு உபகரணங்களிலிருந்து கிடைக்கும் தரவுகள் விசாரணைக்கு மிகுந்த உதவியாக இருக்கும். இதனால் அவகாசம் வழங்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ‘விசாரணையை முழுமையாக முடிக்க எவ்வளவு காலம் தேவைப்படும்’ என்பது குறித்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை டிச.17-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அதன்படி இன்று கீழமை நீதிமன்றம் சார்பில், ‘மொத்தம் 105 சாட்சிகள் உள்ளனர். இதுவரை 20 சாட்சிகள் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு ஒருவரிடம் மட்டுமே விசாரணை நடத்த முடிகிறது. எனவே, விசாரணையை முடிக்க 5 மாதம் அவகாசம் வழங்க வேண்டும்’ எனக் கேட்கப்பட்டது.

இதையடுத்து, ‘தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை முடிக்க கூடுதலாக 5 மாத அவகாசம் வழங்கியும், அந்த 5 மாதத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்’ என்றும் நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார்.

x