நீலகிரி மாவட்டம், குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில், ஹெலிகாப்டர் விபத்து குறித்த விமானப்படையினரின் ஆய்வு அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
முப்படைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தது தொடர்பாக, ஏர்மார்ஷல் மன்வேந்திரசிங் தலைமையிலான விசாரணைக் குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதி முழுவதும் ராணுவம் மற்றும் விமானப்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. பகுதிவாழ் மக்களைத் தவிர மற்றவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
ஏர்மார்ஷல் மன்வேந்திர சிங், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டர் ராஜேஸ்வர் சிங், நீலகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
இவற்றின் தொடர்ச்சியாக, விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் உதிரி பாகங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு வனத் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் உதவி வருகின்றனர். ஹெலிகாப்டரில் பயணித்த ராணுவ வீரர்களின் துப்பாக்கிகள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
நீலகிரி மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரிகளிடம் விமானப்படை விசாரணை அதிகாரிகள், விபத்து நடந்த பகுதிக்கு முதலில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீக்காயத்துடன் மீட்கப்பட்டவர்கள், இறந்த நிலையில் மீட்கப்பட்ட சடலங்கள் குறித்து தகவல் சேகரித்தனர். சம்பவ இடத்தில் உயர் அழுத்த மின் தடம் சென்றதா, அவை சேதமாகி உள்ளதா போன்ற விவரங்களை அறிய மின்வாரியத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அன்றைய தினத்தின் வானிலை நிலவரம் குறித்து தகவல் அளிக்கும்படி, சென்னை வானிலை ஆய்வு மையத்துக்கும் விசாரணைக் குழு கடிதம் அனுப்பியுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்து நடப்பதற்கு முன்பு அதை வீடியோ எடுத்த நாசரின் செல்போனை பறிமுதல் செய்து, அதை கோவை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளனர். அங்கு செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
விமானப்படை அதிகாரிகளின் விசாரணை முடிந்த பிறகு, தங்கள் தரப்பில் தனி விசாரணையை தீவிரப்படுத்த தமிழக காவல் துறை திட்டமிட்டுள்ளது. நஞ்சப்பா சத்திரம் கிராமத்தில் வருவாய் துறையினர் மேற்கொண்டிருக்கும் கணக்கெடுப்பில், விபத்து நடைபெற்ற போது கிராமத்திலிருந்தோர் எண்ணிக்கை, அவர்களது பெயர் மற்றும் விவரங்கள் ஆகியவை வீடு வீடாகச் சென்று சேகரிக்கப்படுகிறது.