நஞ்சப்ப சத்திரம் மக்களுக்கு விமானப்படை நன்றி


ராணுவ ஹெலிகாப்டர் விபத்தின்போது, மீட்புப்பணியில் ஈடுபட்ட குன்னூர் நஞ்சப்ப சத்திரம் மக்களுக்கு விமானப் படை உணவு பொருட்கள் வழங்கி, அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த 8-ம் தேதி முப்படைகளின் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து ஏற்பட்டதும் தீயை அணைக்க, நஞ்சப்ப சத்திரம் பகுதி மக்கள், தங்கள் குடியிருப்புப் பகுதியில் உள்ள குழாய்களிலிருந்து குடங்களில் தண்ணீர் பிடித்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ராணுவம், தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் வந்த பின்னர் அவர்களோடும் முழுமையாக ஒத்துழைத்தனர். மீட்புப் பணிக்காக எவ்வித எதிர்பார்ப்புமின்றி அப்பகுதி மக்கள், தங்கள் வீடுகளிலிருந்து போர்வை உள்ளிட்ட பொருட்களைக் கொடுத்து உதவினர்.

இதனால், விபத்தில் சிக்கியவர்களில் 2 பேரை உயிருடன் மீட்டபோதும் தற்போது ஒருவர் மட்டுமே உயிருடன் உள்ளார்.

இந்த மக்களின் தன்னலமற்றச் செயலை காவல் துறையினரும், விமானப் படையினரும் பாராட்டி உள்ளனர். விமானப் படை சார்பில் நஞ்சப்ப சத்திரம் மக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, உப்பு என நான்கு விதமான பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலும், விமானப் படை துணை மார்ஷல் சஞ்சீவ் ராஜ், நஞ்சப்ப சத்திரம் மக்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி தெரிவித்து கடிதம் வழங்கியுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் செய்த அனைத்து உதவிகளுக்கும் முப்படை சார்பில் நன்றி கூறுகிறோம். தாங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நலமுடன் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளார்.

x