நீலகிரி மாவட்டம், வெலிங்டன் ராணுவ முகாமில் நடக்கவிருந்த நிகழ்ச்சிக்கு முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்டோர் வந்த ஹெலிகாப்டர், குன்னூர் நஞ்சப்ப சத்திரம் பகுதியில் விபத்துக்குள்ளானது.
விபத்தை நேரில் பார்த்த நஞ்சப்ப சத்திரம் மக்கள், தீயணைப்பு மற்றும் காவல் துறையினருடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு நஞ்சப்ப சத்திரம் மக்களைச் சந்தித்து, அவர்களின் சேவையைப் பாராட்டினார். மேலும், அவர்களுக்கு கம்பளிகள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டபோது, இப்பகுதி மக்கள் உரிய நேரத்தில் தீயணைப்பு மற்றும் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். தங்கள் வீடுகளிலிருந்து போர்வைகள் மற்றும் பொருட்களைக் கொண்டு மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்களது சேவை பாராட்டத்தக்கது. இதனால், அவர்களுக்கு குன்னூர் சார் ஆட்சியர் மற்றும் காவல் துறை சார்பில் கம்பளிகள் வழங்கப்பட்டன.
முப்படைகளின் தளபதி பிபின் ராவத் வெலிங்டன் ராணுவ முகாமுக்கு வருகிறார் என்பதால், மாவட்டம் முழுவதுமே பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. அவரது பயணம் வான்வழிப் பயணம் என்றாலும், சாலைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், தீவிர கண்காணிப்புப் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
விபத்து தொடர்பாக கூடுதல் எஸ்பி முத்துமாணிக்கம் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 26 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது” என்றார்.
இந்நிலையில், 2-ம் நாளாக முப்படைகள் சார்பில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஏர் மார்ஷல் மன்வேந்தர் சிங், நஞ்சப்ப சத்திரம் பகுதியில் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்.