விழுப்புரம் - நாகை 4 வழிச்சாலை பணிகள் தரமாக நடைபெறுகிறதா?


விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை திறப்புக்கு முன்னதாக பாலங்கள் உள்ள பகுதியில் பேட்ச் ஒர்க் நடைபெற்று வருகிறது

விழுப்புரம்: விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் வழியாக நாகப்பட்டினம் இடையே 194 கி.மீ தூரத்துக்கு புதிதாக நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி 2 வருடங்களுக்கு முன் ரூ. 6,431 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு, தற்போது நிறைவு பெறும் நிலையில் உள்ளது.

விழுப்புரம், ஜானகிபுரம் பகுதியில் இருந்து தொடங்கும் இந்த நெடுஞ்சாலை விழுப்புரம் மாவட்டத்தில் 16 கிராமங்கள், கடலூர் மாவட்டத்தில் 61 கிராமங்கள், நாகை மாவட்டத்தில் 43 கிராமங்கள், புதுச்சேரி மாநிலத்தில் 14 கிராமங்கள் என மொத்தம் 134 கிராமங்களின் வழியாக செல்கிறது. இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையானது தார் மூலம் அமைக்கப்படாமல் முழுவதுமாக சிமென்ட் சாலையாக அமைக் கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து கண்டமங்கலத்தை அடைவதற்குள் 10 மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தேசிய நெடுஞ்சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ஜானகிபுரம் பகுதியில் உள்ள மேம்பாலம், திருப்பாச்சனூர் பகுதியில் உள்ள மேம்பாலம், கோலியனூர் பகுதியில் உள்ள மேம்பாலம் என பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலங்கள் மற்றும் சாலையின் நடுவே நீண்ட பிளவு ஏற்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் சிமென்ட் சாலை சமமற்ற முறையில் அமைக்கப் பட்டுள்ளதால் வாகனங்களில் அதிர்வுகள் அதிகமாக உள்ளதாகவும், குறிப்பாக கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது அதிகப்படியான அதிர்வுகள் உணரப்படுவதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். மேலும் மழை காலங்களில் சிமென்ட் சாலையில் பயணிப்பது கடினமாக இருப்பதாகவும் பிரேக் பிடிக்கும்போகும் வாகனங்கள் வழுக்கிச் செல்வதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கிறனர்.

முறையாக திட்டமிட்டு சாலைமற்றும் மேம்பாலம் அமைக்கப்படாததால் வெளியூர்களுக்கு எந்த வழியாக செல்ல வேண்டும் என்பதில் வாகன ஓட்டிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. மேலும் முறையான வழிகாட்டி பதாகை வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. நான்கு வழிச் சாலை பணிகள் முழுமை பெறுவதற்கு முன்பாகவே சாலைகள், மேம்பாலங்கள் என பல இடங்களில் விரிசல் ஏற்பட்டும், பள்ளங்களும் விழுந்துள்ளதால் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்களிடம் கேட்டபோது, “பாலங்கள் அமைக்கப்பட்ட பகுதிகளில் சாலையின் நடுவே வெடிப்பு எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து ஒப்பந்ததாரரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து 6 பேர் கொண்ட குழு விரைவில் வருகை தர உள்ளனர்” என்று தெரிவித்தனர்.