ஹாட் லீக்ஸ்: பொறுமை பொன்ஸ்... வாடிய வசந்த்!


பொறுமை பொன்ஸ்... வாடிய வசந்த்!

கன்னியாகுமரியில் களம்கண்ட பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன், வாக்கு எண்ணும் மையத்துக்குக் காலையில் உற்சாகமாகவே வந்தார். முதல் சுற்றிலேயே முடிவு தனக்கு சாதகமாக இல்லை என்று தெரிந்ததும், வளாகத்தில் இருந்த ஷெட்டில் தனியாகப் போய் உட்கார்ந்துவிட்டார். அங்கிருந்தபடியே வாக்கு வித்தியாசத்தை பேப்பரில் குறித்துக்கொண்டே வந்தவர், செல்போன் வழியாக மற்ற தொகுதிகளின் நிலவரங்களையும் பார்த்துக்கொண்டே வந்தார். தான் இரண்டு லட்சம் வாக்குகள் பின் தங்கிய பிறகும் அங்கிருந்து அவர் நகரவில்லை. அதேசமயம் காங்கிரஸ் வேட்பாளர் ஆரம்பத்திலிருந்தே டாப் கியரில் இருந்தாலும்,  மாலையில்தான் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்தார். குமரியில் ‘கை’ ஓங்கினாலும் அகில இந்திய அளவில் காங்கிரஸின் நிலையைப் பார்த்து வாடிப்போனார் வசந்தகுமார்.

இருக்கு... ஆனா இல்ல!

தேர்தலுக்கு ஒரு வருடம் முன்பே வேட்பாளர்களை அடையாளம் காட்டிய தினகரன், அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்தி கட்சியையும் பலப்படுத்தினார். அவர் சொன்ன கணக்குப்படி ஓவ்வொரு பாராளுமன்றத் தொகுதியிலும் கட்சிப் பொறுப்பாளர்கள் மட்டுமே 38,940 பேர். இவர்கள் தவிர்த்து கட்சியின் சாதாரண உறுப்பினர்கள் 85,536 பேர். “இவங்க அத்தனை பேரும் ஓட்டுப் போட்டிருந்தாலே அத்தனை தொகுதியிலயும் அமமுக ஒண்ணே கால் லட்சம் ஓட்டு வாங்கியிருக்கணுமே” என்று கிண்டலடிக்கிறது அதிமுக முகாம்!

x