காத்திருக்கும் நேரம் வாசிப்பு... ஓய்ந்திருக்கும் நேரம் எழுத்து..!- அனுபவ படைப்பாளி ஆட்டோ சந்திரன்


கா.சு.வேலாயுதன்

‘பூமியை கொலைக்களமாக்கும் அமெரிக்கா, க.பாவின் கோவையில் ஜீவா, எம்ஜிஆர் திரைப்படங்களில்  போர்க்கலைகள், கட்டுத்தளையினூடே காற்று, எரியும் பட்டத்தரசி’ உள்ளிட்ட எட்டு நாவல்களின் ஆசான் மு.சந்திரகுமார். ஆட்டோ சந்திரன் என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் கடந்த 35 வருடங்களாக கோவை ஹோப் காலேஜ் அருகே மணீஸ் தியேட்டர் ஸ்டாண்டில் இருந்து ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு சாமானியர். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘விசாரணை’ படத்தின் மூலக்கதையான ‘லாக் அப்’ இவரது கருவில் உருவான நாவல் என்பது முக்கியமாகச் சொல்ல வேண்டிய விஷயம்.

இவரைப் பற்றி கொஞ்சம் பேசலாமே என்று அந்த ஆட்டோ ஸ்டாண்டுக்குப் போனேன். “அடுத்த வண்டி நம்மதான் எடுக்கணும். ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க. சவாரிய இறக்கி விட்டுட்டு வந்துடுறேன்” என்றபடியே ஆட்டோவைக் கிளப்பினார் சந்திரன். ரொம்ப நேரம் என்னை காக்க வைக்காமல் சீக்கிரமே திரும்பி வந்தவர், வண்டியை வரிசையில் போட்டுவிட்டு வந்து என்னிடம் பேசினார்.

‘‘படிச்சது பத்தாப்புத்தான். சொந்த ஊரு கிணத்துக்கடவு கிட்ட இருக்கிற மெட்டுவாவி. பள்ளிக்கூடம் படிக்கிற காலத்துலயே, கப்பல்ல மெக்கானிக்கா போகணும், உலகத்தையே சுத்திப் பாக்கணும்னு எனக்குள்ள ஒரு ஆசை. ஆனா குடும்ப சூழல்நிலை என்னைய ஊர் ஊரா சுத்த விட்டுருச்சு. மூணு வருஷம் நாடோடி கணக்கா ஊரைச் சுத்தீட்டு கோயமுத்தூர் வந்தேன். இங்கேயும் ஒண்ணும் வழியா செட் ஆகல. அண்ணனும் மாமாவும் ஆட்டோ ஓட்டுறவங்க. அதனால அவங்க வழியிலயே ஆட்டோ ஓட்ட கத்துக்கிட்டேன்.

x