ஹாட் லீக்ஸ்: வாசலில் மலர்ந்த தாமரை


ஸீட் குடுத்தா ஓடிப்போயிருவேன்!

திண்டுக்கல் அதிமுக எம்பி-யான உதயகுமார் இந்த முறை கட்சியில் விருப்ப மனு கொடுக்க விருப்பமே இல்லாமல் ஒதுங்கி இருந்தாராம். “யோவ், பணத்தக் கட்டுய்யா... தலைமையில காச்சப்போறாங்க” என்று சொல்லி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்உள்ளிட்டவர்கள்தான் அவரைவிருப்ப மனு கொடுக்க வைத்தார்களாம். அப்படியும், “சரி, பணம் கட்டுறேன். ஆனா, என்னைய வேட்பாளரா அறிவிச்சீங்க... அடுத்த நாளே டிடிவி கட்சிக்குப் போயிருவேன்” என்று எச்சரிக்கை மணி அடித்துவிட்டுத்தான் விரும்பாத அந்த விருப்ப மனுவைக் கொடுத்தாராம்!

பரிகாச மோடி... பதிலடி சிதம்பரம்!

கடந்த மாதம் திருப்பூர் வந்திருந்த மோடி, ப.சிதம்பரத்தை “ரீ கவுன்டிங் மினிஸ்டர்” எனப் பரிகாசம் செய்தார். இந்த நிலையில் கடந்த வாரம் திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம் அதற்கு பதிலடி கொடுத்தார். “நான் இந்தக் கூட்டத்துக்கு வருவதற்கு முன்னதாக டெல்லியிலிருந்து பிரதமர் மோடி என்னிடம் அலைபேசியில் பேசினார். அப்போது , ‘திருப்பூர் மக்களிடம் ஒரு விஷயத்தை நான் சொன்னதாகச் சொல்லுங்கள்’ என்று சொல்லி ஒரு விஷயம் சொன்னார். அதை அவர் திருப்பூர் வந்திருந்தபோது உங்களிடம் சொல்ல மறந்துவிட்டாராம். அவர் சொன்னது இதுதான். உங்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவதாக மோடி தெரிவித்திருந்தாராம். இன்று சனிக்கிழமையாக இருப்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. அதனால் திங்கள் கிழமை காலையில் அந்த 15 லட்சத்தை உங்களது வங்கிக் கணக்கில் போட்டுவிடுவதாகச் சொல்லச் சொன்னார்” என்று சிதம்பரம் சீரியஸாக சொல்ல... ஒட்டுமொத்த கூட்டமும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது.

x