கரு.முத்து
கழகங்களில் இல்லாத கலகங்களை நிகழ்த்திக் காட்டுவதில் காங்கிரஸோடு யாரும் போட்டி போடவே முடியாது. இங்கிருப்பவர்கள் ஆளாளுக்கு ஒன்றைச் சொல்வார்கள். இறுதியில் டெல்லியிலிருந்து புதிதாய் ஒன்றைச் சொல்வார்கள். அதையும் எதிர்த்து கருத்துச் சொல்லும் வானளாவிய சுதந்திரம் கொண்ட காங்கிரஸ் கட்சிக்குள், இப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் நியமனத்துக்கு எதிராகவும் கலகக் குரல் கிளம்பியிருக்கிறது. அதுவும் தலைவர் கே.எஸ்.அழகிரியின் சொந்த மாவட்டமான கடலூரிலிருந்தே கிளம்பியிருக்கிறது!
கடலூர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான எம்.என்.விஜயசுந்தரம்தான் அழகிரி நியமனத்துக்கு எதிராக ஆர்ப்பரித்துக் கிளம்பியிருப்பவர். அதிரடிப் பிரமுகரான விஜயசுந்தரம், டாஸ்மாக் கடைகளில் ஜெயலலிதா படத்தை மாட்டும் போராட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பூட்டுப் போடும் போராட்டம், நகராட்சி அலுவலகத்துக்கு பூட்டுப் போடும் போராட்டம் என அதிரடி கிளப்புபவர். விருத்தாசலம் அருகே மங்களம்பேட்டையில் தனியாரிடம் விற்கப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான இடத்தை மீட்க இவர் நடத்திய சொத்துமீட்புப் போராட்டம் கட்சிக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகுதான் தமிழகம் முழுவதும் கட்சிக்குச் சொந்தமான சொத்துகளை மீட்க காங்கிரஸ் கட்சி சார்பில் சொத்து மீட்புக்குழு அமைக்கப்பட்டது. அதன்பிறகு சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. அகில இந்திய அளவிலும் காங்கிரஸ் சொத்துமீட்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கே.எஸ்.அழகிரி காங்கிரஸ் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து பிப் 18-ம் தேதி சிதம்பரத்தில் உண்ணாவிரதம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார் விஜயசுந்தரம். அதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாய் இருந்த அவரை பூலாமேட்டில் உள்ள அவரது பண்ணையில் சந்தித்தேன். உயர் ரக நாய்களுக்கும் வட்டமிட்ட காக்கை கூட்டத்துக்கும் பிஸ்கட் பாக்கெட்டுகளைப் பிரித்து போட்டுவிட்டு வந்து தோப்புக்குள் இருந்த பெஞ்சில் அமர்ந்தார். “அழகிரிக்கு எதிராக ஏன் இத்தனை காட்டம்?” என்ற கேள்வியோடு காமதேனு பேட்டி ஆரம்பமானது.