தீதி vs மோடி- மாநில சுயாட்சியா..? மம்தாவின் சுயநலமா..?


இரா.வினோத்

மேற்கு வங்கத்தில் கலகம் பிறந்திருக்கிறது. அங்கே மம்தா பானர்ஜி ஆடிய அரசியல் ஆட்டத்தின் அதிர்வுகள் அடங்க நீண்ட காலம் ஆகும் போலிருக்கிறது!

`இது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் நடக்கும் நேரடி மோதல்' எனக் கடந்த ஒரு வாரமாக தேசிய ஊடகங்கள் அலறுகின்றன. ஆனால், ``இது பிரதமர் மோடிக்கும், பிரதமர் கனவில் இருக்கும் மம்தா பானர்ஜிக்கும் நடந்த நேரடி மோதல். பிரதமர் ரேஸில் ஓடிக்கொண்டிருக்கும் ராகுல் காந்தி, மாயாவதியை முந்த, `நான்தான் மோடியை நேருக்கு நேர் எதிர்க்கிறேன்' என்பதைக் காட்ட, மம்தா ஆடிய மாஸ் ஆட்டம்!'’ என்கிறார்கள் அரசியல் விமர்சர்கள்.

பாஜகவுக்கு எதிரான கூட்டணியை ஒருங்கிணைப்பதிலும், தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்வதிலும் தொடக்கம் முதலே மம்தா பானர்ஜி குறியாக இருக்கிறார். இதனாலேயே கடந்த மே மாதம் பெங்களூருவில் குமாரசாமி பதவியேற்றபோது சோனியா நெருங்கியபோது கூட, மம்தா விலகிப் போனார். இதையடுத்து ஜனவரி 19-ம் தேதி கொல்கத்தாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ், மு.க. ஸ்டாலின் என 20-க்கும் மேற்பட்ட கட்சித் தலைவர்களை மேடையேற்றி தன் பலத்தைக் காட்டினார். ஏற்கெனவே உபியில் மாயாவதி - அகிலேஷ் கூட்டணியால் நெருக்கடிக்கு ஆளான‌ பாஜக மேலிடம், மம்தாவின் இந்த வேகத்தால் கொந்தளித்தது. அவரது வேகத்தைத் தடுக்க சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கையும் கையிலெடுத்திருக்கிறது பாஜக.

x