வலை வீசிய பாஜக... தலை தப்பிய மோகன்லால்..!


என்.சுவாமிநாதன்

நாடாளுமன்றத் தேர்தல் ஜுரம் கேரளத்திலும் ஜிவ்வென்று ஏறுகிறது. இதன் ஒரு பகுதியாக மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை தலைநகர் திருவனந்தபுரத்தில் களம் இறக்க கேரள பாஜக கடும் முயற்சிகளை மேற்கொண்டது. அண்மையில் மத்திய அரசு மோகன்லாலுக்கு அறிவித்த பத்மபூஷண் விருதும் இதற்கு தூபம்போட, அஜித் ஸ்டைலில் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் மோகன்லால்.

கேரள தேர்தல் களத்தில் எப்போதும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என இருமுனைப் போட்டியே நிலவும். கடந்த சட்டமன்றத் தேர்தலில்தான் ஓ.ராஜகோபால் பெற்ற வெற்றியின் மூலம் கேரள சட்டமன்றத்தில் தனது கணக்கைத் துவங்கியது பாஜக. இந்நிலையில், சபரிமலை விவகாரம் தங்களுக்கு சாதகமான நிலையை உருவாக்கி இருப்பதாக நம்பும் பாஜக, அதை வைத்து கேரளத்தில் வலுவாக கால் ஊன்ற நினைக்கிறது.

கேரளத்தில் ஒரே ஒரு எம்எல்ஏ-வை வைத்திருந்தாலும் மாநிலங்களவையில் அக்கட்சிக்கு கேரளத்திலிருந்து சென்ற 4 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் நடிகர் சுரேஷ் கோபியும் அடக்கம். முதலில் அவர் மூலமாக மோகன்லாலை வளைக்கவும் முயற்சிகள் நடந்தன. ஆனால், அவர் பிடி கொடுக்கவில்லை. மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்பட்டு, அமைச்சரும் ஆக்கப்பட்ட அல்போன்ஸ் கண்ணன்தானம் உள்ளிட்ட நான்கு எம்பிக்கள் இருந்தாலும், மோகன்லால் போன்ற மாஸ் ஹீரோ இணைந்தால் கேரளத்தில் கட்சியைத் தூக்கி நிறுத்தலாம் என்பது பாஜகவின் கணிப்பு.

x