‘2ஜி’ன்னா ராசா... திமுகவின் துணிச்சல் பிரச்சாரம்!


கா.சு.வேலாயுதன்

ஒரு காலத்தில் ‘2ஜி’ என்றாலே திமுகவினருக்கு அலர்ஜி. ஆனால் இப்போது, “ ‘ 2ஜி’ ன்னா ராசா... ‘2ஜி ராசா’ன்னா வெற்றி நாயகன்” என்று மக்கள் மத்தியில் துணிச்சல் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்குக் குளிர்விட்டுப் போச்சு!

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கப் போகும் கட்சிகள் பற்றிக்கூட இன்னும் தெளிவு பிறக்கவில்லை. அதற்குள்ளாக, நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவை வேட்பாளராக பிரகடனம் செய்து பிரச்சாரத்தையே தொடங்கிவிட்டது திமுக. கடந்த முறை நீலகிரி தொகுதியில் நின்று அதிமுக வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனிடம் தோற்றுப்போன ராசா, `மறுபடியும் இங்குதானே வரப்போகிறோம்’ என்ற முடிவில் அலுவலகங்களை காலி செய்யாமலே வைத்திருந்தார். 2 ஜி வழக்கில் ரிலீஸ் ஆனதும் தொகுதி முழுவதும் டூர் அடித்து, தான் எந்தத் தப்பும் செய்யவில்லை எனத் தன்னிலை விளக்கம் தந்தார். தொடர்ந்து தொகுதியோடும் தொகுதி மக்களோடும் இணைப்பிலேயே இருக்கிறார். மக்களின் ஞாபகசக்தி மீது அண்ணனுக்கு அவ்வளவு நம்பிக்கை!

கடந்த மாதம், தனது நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளின் திமுக பொறுப்பாளர்களைச் சந்தித்து தேர்தலுக்குத் தயாராகும்படி அவர்களைத் தட்டியெழுப்பினார். இப்போது ஸ்டாலின் அறிவித்துள்ள ‘மக்களிடம் செல்வோம்’ ஊராட்சி சபைக் கூட்டங்கள் மூலமாக தொகுதி மக்களை நெருங்கி இருக்கிறார் ராசா. இந்தப் பயணங்களில், 2 ஜி சமாச்சாரங்களை மக்களே மறந்தாலும் ராஜாவின் விசுவாசிகள் மறக்கவிட மாட்டார்கள் போலிருக்கிறது. மூச்சுக்கு மூந்நூறு முறை 2 ஜி -யை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

x