வங்கிக்குள் ஒரு ஆரோக்கிய ஷாப்பிங்!


கா.சு.வேலாயுதன்

டெபிட் கார்டுகளையும், காசோலைப் புத்தகங்களையும் கடந்த கால நினைவுகளாய் டிஜிட்டல் இந்தியா மாற்றிய பிறகு வங்கிக்கு நேரில் செல்வதே அரிதாகிவிட்டது. கடந்த வாரம், கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் இருக்கிற எச்.எஸ்.பி.சி வங்கிக் கிளைக்குச் சென்றிருந்தேன். வழி தவறி வந்துவிட்டோமோ என நினைத்து மீண்டும் வெளியே வந்து எச்.எஸ்.பி.சி. பெயர் பலகையைப் பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டேன்!

கண்ணாடிக் கதவைத் தள்ளி உள்நுழையும்போதே, குளிர்சாதன அரங்கினுள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொருட்காட்சியைப் போலிருந்தது வங்கி. நாசியைத் துளைத்தெடுக்கிற தைல வாசனையின் வரவேற்பைத் தாண்டிச் சென்றால், ஓலை வேயப்பட்ட தோடர்களின் பாரம்பரிய வடிவிலான குடில். 
குடிலுக்குள் தோடர், கோத்தர், இருளர், பனியர், குரும்பர், காட்டு நாயக்கர் என நீலகிரி பழங்குடியின மக்களின் மூலிகைகள், கைவினைப் பொருட்கள். வங்கிக்கு வருவோர் பழங்குடியின மக்களின் வாடிக்கையாளர்களாய் மாறி, ஆளுக்கொரு பொருட்களைப் பற்றி ஆர்வமாய் விசாரித்து, விலை பேசிக்கொண்டிருந்தார்கள்.

வங்கி அலுவலர்களின் மேஜைகளில் சின்னச் சின்ன சதுரங்களில் அழகழகாய் பழங்குடியினரின் புகைப்படங்கள். கூடை முடையும் குரும்பர்கள், குழல் ஊதிக் கொண்டிருக்கிற இருளர்கள், நடனமாடிக்கொண்டிருக்கும் கோத்தர்கள், தேன் எடுத்துக் கொண்டிருக்கும் காட்டு நாயக்கர்கள் என அத்தனை புகைப்படங்களும் அவ்வளவு அழகும் யதார்த்தமும் மிளிர்கிறது.

x