நான் சம்பாதிக்கிறது எல்லாமே காந்திக்குத்தான்!- வியப்பூட்டும் கோவை தங்கவேலு


அக்கம்பக்கத்தினர் விநோதமாகப் பார்த்தாலும், பேசினாலும் அதையெல்லாம் சட்டைசெய்யாமல் கடந்த 50 ஆண்டுகளாக காந்தியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார் தங்கவேலு. கதர் சஃபாரி ஸூட். கழுத்தில் காந்தி உருவம் பொறித்த வெள்ளிப் பதக்கம், சட்டையின் மேல் பட்டனில் காந்தி படம் பொறித்த காங்கிரஸ் பேட்ஜ், அதற்கு இடதுபுறம் நேரு, திருவள்ளுவர், காமராஜர் உருவத்துடன் கூடிய நாணயங்கள் ஒட்டப்பட்ட லேமினேஷன் பேக்கிங். வலதுபுறம் ‘INDIA‘ என்ற வார்த்தை தங்கமாய் மின்னும் தேசியக்கொடி. இதையெல்லாம் அணியாமல் ஒருநாளும் தங்கவேலு தனது வீட்டைவிட்டு வெளியேறியது இல்லை.கோவை, சரணவம்பட்டியில் உள்ளது இவரது வீடு.

தனது வீட்டின் முகப்புச் சுவர் முழுக்க தமிழ், இந்தி, ஆங்கிலம் என வாசகங்களால் நிறைத்து வைத்திருக்கிறார். 1969-ல் காந்தி நூற்றாண்டு விழாவில், தான் கலந்து கொண்ட பாதயாத்திரை தொடங்கி தனது முழு சரித்திரத்தையே வீட்டுச் சுவற்றில் ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார் தங்கவேலு. அதுமட்டுமின்றி, தேசத் தலைவர்கள் படங்களும் திருக்குறள் வரிகளும் சமத்துவ சிந்தனைகளும் அந்த வீட்டின் முகப்புச் சுவரை முழுதாய் நிறைத்திருக்கின்றன.

இத்தனையும் போதாதென்று தனது வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் காந்தி, காமராஜர், வள்ளுவர் சிலைகளை வைத்து சின்னதாய் ஒரு கோயிலும் கட்டியிருக்கும் தங்கவேலு, இங்கே தினமும் ஊதுபத்தி, கற்பூரம் கொளுத்தி வழிபாடும் செய்கிறார். இந்தக் கோயில் சுவரிலும் காந்திய சிந்தனைகள் உள்ளிட்ட வாசகங்கள்!

“1993-ல் இந்தக் கோயிலைக் கட்டினேன்” என்று சொன்ன அவரை நானும் சற்று விநோதமாகவே பார்த்தேன். “உங்கள மாதிரித்தான் எல்லாரும் என்னைய வேடிக்கையா பார்க்கிறாங்க. இன்னைக்கு காந்தியச் சிந்தனை, காந்தியப் பற்று எல்லாம் எல்லோருக்கும் வேடிக்கை விநோதமாத்தான் ஆகிப்போச்சு!” என்றபடியே கணீர் குரலில் தன்னைப் பற்றி பேச ஆரம்பித்தார் தங்கவேலு.

x