ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் என்று நாங்கள் எப்படிச் சொல்வோம்?- திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பளிச் பேட்டி!


காங்கிரஸ் நடத்திய முழு அடைப்புப் போராட்டத்திலும் சென்னை ஆர்ப்பாட்டத்திலும் திமுக தரப்பில் முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்ளாததால் ஏற்பட்ட சலசலப்பு இன்னும் அடங்கவில்லை. இதுகுறித்து கடந்த இதழில் நமக்குப் பேட்டியளித்திருந்த காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன், “காங்கிரஸ் கட்சியை திமுக உதாசீனப்படுத்துகிறதோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது” என்று சர்ச்சையைக் கிளப்பியிருந்தார்.

இந்தப் பேட்டிக்குப் பிறகு காங்கிரஸ் விஐபி-க்கள் பலரும் கராத்தே தியாகராஜனைத் தொடர்புகொண்டு, “எங்களால் சொல்ல முடியாத ஆதங்கத்தை நீங்கள் வெளிப்படையாகப் பேசியிருக்கிறீர்கள்” என்று பேட்டிக்கு பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் கராத்தே எழுப்பியிருக்கும் சந்தேகம் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியை நேரில் சந்தித்துப் பேசினோம். நாம் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் தயக்கமின்றி வெளிப்படையாகவே பேசினார் பாரதி.

காங்கிரஸ் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் திமுக முக்கியத் தலைவர்கள் யாரும் கலந்துகொள்ளாததை ஆதங்கமாகத் தெரிவித்திருக்கும் தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், “திமுக எங்களை உதாசீனப்படுத்துகிறதோ எனச் சந்தேகிக்கிறோம்” என்று சொல்லியிருக்கிறாரே?

அந்தக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசரே, “யார் கலந்து கொள்கிறார்கள் என்பது முக்கியமல்ல... எந்தக் கட்சி கலந்து கொள்கிறது என்பதுதான் முக்கியம்” என்று கராத்தே தியாகராஜனுக்கு பதில் சொல்லி இருக்கிறார். எனது கருத்தும் அதுதான். டில்லியில் நடந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஞ்சலிக் கூட்டத்தில் திமுக சார்பில் நான்தான் கலந்துகொண்டேன். அதற்காக வாஜ்பாய்க்கு திமுக முக்கியத்துவம் தரவில்லை என்று அர்த்தமாகி விடுமா?

x