இன்னும்கூட மக்கள் மாறவே இல்லைல..!


சாதியக் கொடுமைகளுக்கு எதிராக அறச்சீற்றம் நிகழ்த்திய ஆசிரியர் ஆர்.எஸ்.ஜேக்கப். அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த பாப்பாளை சமைக்கவிடாமல் தடுத்ததை அறிந்து 93வயதிலும் தீராக்கவலை கொள்கிறார். “இன்னும்கூட மக்கள் மாறவே இல்லைல..!” என அவரிடமிருந்து வெளிப்படுகிறது ஆற்றாமையின் குரல்!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ராஜாவின் கோவில் ஜேக்கப்பின் பூர்வீகம். 3 நாவல்கள், 18 சிறுகதைத் தொகுப்புகள், வரலாற்று களஆய்வுகள் என இதுவரை 104 நூல்கள் எழுதியுள்ளார். சுதந்திரப் போரின்போது  ‘நெல்லை சதி’வழக்கில் கைது செய்யப்பட்டு மூன்றரை ஆண்டுகள் சிறையில் கழித்த இவர் மூத்த கம்யூனிஸ்ட் தோழர் நல்லகண்ணுவின் நண்பர்.

தனது இளம்பிராயத்தில் சாதிய கொடுமைகளுக்கு எதிராகப் போராடியதால் பலமுறை தாக்குதலுக்கு உள்ளானார் ஜேக்கப். கால்களில் இருக்கும் காயத் தழும்புகள் அந்த நினைவுகளை இன்னமும் சுமக்கின்றன. நெல்லை, சாந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் ஜேக்கப்பைச் சந்தித்தேன் “70 வருசம் ஓடிருச்சு. ஓட்டப்பிடாரம் பக்கத்தில் நயினார்புரத்தில் ஆசிரியர் வேலைக்குப் போனேன். டயோசிசனுக்குச் சொந்தமான பள்ளிக்கூடம். அதை ஒட்டி இருந்த தேவாலயத்துக்கும் நான் அருட்பணியாளர். அந்த ஊரில் பட்டியல் இன மக்கள் மூன்றில் ஒருபங்கு இருந்தாங்க. அவுங்க தங்களோட பிள்ளைங்களை ஸ்கூலுக்கு அனுப்பக்கூடாதுன்னு ஊரு பண்ணையாரு கட்டுப்பாடு. அதுக்குப் பயந்தே யாரும் பள்ளிக்கூடத்துக்கு வரமாட்டாங்க.

நான் வேலைக்குப் போன புதுசுல, பண்ணையார்கிட்ட சொல்லிட்டுத்தான் பணிக்கு வரணும்னு மிரட்டுனாங்க. நான் அதைச் சட்டை செய்யல. பட்டியல் இன மக்களின் வீடுகளில் போய்,  ‘பிள்ளைங்களைப் படிக்க அனுப்புங்க’ன்னு சொன்னதால பண்ணையாருக்கு என்மேல் கோபம். பண்ணை யார் குதிரையில்தான் வருவாரு. விரும்புன பெண்ணைத் தூக்கிட்டுப் போவாரு. எதுக்க திராணியில்லாம அந்த மக்கள் அழுவாங்க. பதிலுக்கு கம்பப்புல் வீட்டுக்கு வரும்.

x