ஹாட் லீக்ஸ்: செண்பகத்தோப்பு சீக்ரெட்!


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் செண்பகத்தோப்பில் ஓபிஎஸ்-ஸின் குல தெய்வமான பேச்சியம்மன் கோயில் இருக்கிறது. தினமும் இரண்டு டிரிப் மட்டுமே பேருந்து வந்து செல்லும் இந்தப் பகுதிக்கு தரமான சாலை அமைத்துக் கொடுத்தார் ஓபிஎஸ். அவர் குலசாமி புண்ணியத்தில், காட்டழகர் கோயிலுக்குச் செல்ல சாலை வசதி கிடைத்திருக்கிறது என்று நெகிழ்ந்தார்கள் மக்கள். ஆனால், செண்பகத்தோப்புக்குள் அவருக்கு ஏக்கர் கணக்கில் புது பந்தம் வந்திருப்பதாகவும், அந்தப் பிடிப்பும்கூட இந்தப் பளிச் சாலை வசதிக்கு ஒரு காரணம் என்றும் ஒரு பேச்சு வந்திருக்கிறது. ஆட்டை மேய்ச்சது மாதிரியும் ஆச்சு... அண்ணனுக்குப் பொண்ணைப் பார்த்தது மாதிரியும் ஆச்சும்பாங்களே... அது இதுதானோ!

ராகுலுக்கு உறவுப்பாலம் போடும் ராஜு!

இயக்குநர் பா.இரஞ்சித் சமீபத்தில் ராகுல்காந்தியைச் சந்தித்தார். அப்போது பட்டியல் இன மக்களின் பிரச்சினைகள் குறித்து இருவரும் விலாவாரியாகப் பேசினர். இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்தது ராகுல்காந்தியின் செயலாளர் ராஜு. ஆந்திராவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான இவர்தான் இந்தியா முழுமைக்கும் உள்ள பட்டியல் இனத் தலைவர்களையும் ராகுல் காந்தியையும் சந்திக்க வைக்க உறவுப்பாலமாக இருக்கிறாராம். இவரது ஏற்பாட்டில்தான் திருமாவளவனும் ராகுலைச் சந்தித்தாராம்.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..!

x