இதுவும் ஒரு கொலைதான்!


தமிழக அரசின் அதி தீவிர மது விற்பனைக் கொள்கை மற்றுமொரு உயிரைக் காவு வாங்கியிருக்கிறது. இம்முறை பலியாகியிருப்பது வாலிபப் பருவத்தின் லட்சியக் கனவுகளை இதயத்தில் தேக்கி வைத்திருந்த மாணவன் தினேஷ்!

தந்தையின் குடிப்பழக்கத்தால் உண்டான பாதிப்பு, அவனைத் தூக்கு மாட்டித் தொங்கத் தூண்டியிருக்கிறது. ‘தந்தையே! குடிப் பழக்கத்திலிருந்து இனியாவது மீளுங்கள்’ என்று இறுதிக் கடிதத்தில் கண்ணீர் வேண்டுகோள் வைத்ததோடு... ‘மதுக் கடைகளை எல்லாம் மூடுங்கள். இல்லையேல் ஆவியாக வந்தாவது அவற்றை நான் மூடுவேன்’ என்று அரசை நோக்கிக் கதறியிருக்கிறான் அந்த அப்பாவி மாணவன்.

அந்தரத்தில் ஊசலாடிய தினேஷின் சடலம் எதன் குறியீடு? வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே துடித்துக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான குடிநோயாளிகளின் குடும்பங்களை அல்லவா அந்தக் காட்சி பிரதிபலிக்கிறது!

சொல்லப்போனால், தினேஷின் மரணம் படுபாதகக் கொலை! மதுவால் நேரிடும் மரணங்களைக் கண்ணெதிரில் தொடர்ந்து பார்த்த பிறகும், மனம் இரங்காத ஆட்சியாளர்கள்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். முதியவர் சசிபெருமாளின் ‘அலைபேசி கோபுர’ அகால மரணம் தொடங்கி, இப்போது தினேஷின் தற்கொலை வரை எதுவுமே இவர்களைச் சலனப்படுத்தவில்லையே!

x