வீரப்பன் இருந்திருந்தால், காவிரி தண்ணீர் வந்திருக்கும்!- மனம் திறக்கிறார் பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியம்


மூன்று மாநிலக் காவல் துறையினரும் அதிரடிப் படையினரும் காட்டுக்குள் சல்லடைப் போட்டுத் தேடியும் நெருங்க முடியாத வீரப்பனை, நேரில் சந்தித்து ஊடக வலிமையை உலகறியச் செய்தவர் நக்கீரன் செய்தியாளர் சிவசுப்பிரமணியம். வீரப்பனைப் பற்றி பல்வேறு தகவல்கள் உலவிய நிலையில், ‘இவர் தான் வீரப்பன்’ என்று சிவசுப்பிரமணியம் எடுத்த படங்களும் பேட்டியும் புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் படிக்க வேண்டிய பாடங்கள். ‘நக்கீரன்’ இதழில் 25 ஆண்டுகளாகச் செய்தியாளராக இருந்தவர், சமீபத்தில் ஓய்வு பெற்றுள்ளார். அவருடனான ஒரு சந்திப்பிலிருந்து...

வீரப்பனுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி?

1991-ம் காலகட்டத்தில் ‘சத்திரியன்’, ‘தளபதி’, ‘போலீஸ் செய்தி’உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் செய்தியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். ‘தளபதி’ இதழின் ஆசிரியர் துரை அண்ணன், ‘போலீஸ் செய்தி’ துணை ஆசிரியர் நெல்லை பாரதி உள்ளிட்ட பத்திரிகை நண்பர்கள் பலரும், ‘உங்க பகுதியில்தான் வீரப்பனின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நீங்கள் முயன்றால் வீரப்பனைச் சந்திக்கலாமே’ என்று ஆர்வத்தைத் தூண்டினார்கள். அதைத் தொடர்ந்து, வீரப்பனின் நெருங்கிய சொந்தங்கள் சிலர் மூலம் அவரைச் சந்திக்க முயன்றேன்.

ஆனால், முடியவில்லை. நான் படிக்கும்போது தி.க மாணவரணியில் இருந்ததால், கொளத்தூர் மணி அண்ணனிடம் அறிமுகம் இருந்தது. அவரைச் சந்தித்து ‘வீரப்பனைச் சந்திக்க வைக்க முடியுமா’ என்று கேட்டேன். ‘ஒரு வருஷம் சிறைக்குப் போக நீங்க தயாரா இருந்தா சொல்லுங்க. முயற்சி செய்யலாம்’ என்றார். நான் சரியென்றேன்.

x