’கடைசி வரை இதுதான் என் வீடு’- காலத்தை வென்ற நீலகண்டனின் கதை


சாலையோரங்களில்... நடைபாதைகளில் தனியாக அழுதுகொண்டும் சிரித்துக்கொண்டும் புலம்பித் திரியும் எத்தனையோ மனிதர்களை தினம் தினம் நாம் வெகு இயல்பாகக் கடந்துவிடுகிறோம். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பெருங்கதை நிச்சயம் இருக்கும். அந்த ஒவ்வொருவரையும் ஒருகாலத்தில் யாராவது தூக்கி அணைத்து, ஆரத்தழுவி கொஞ்சியிருப்பார்கள்.

இவர்களும் அப்படியான உறவுகளை உயிரென நேசித்திருப்பார்கள். ஆனால், ஏன் இன்று இப்படி ஆதரவற்றுப்போனார்கள்..?  ஒரு வாய் உணவுக்கு, ஒரு மிடறு தண்ணீருக்குக்கூட வழியில்லாமல் போனார்கள்..? இதை எல்லாம் என்றாவது ஒருகணம் யோசித்திருப்போமா?  அப்படி யோசிக்க ஒரு கணம் வரமாக எனக்கு வாய்த்தது.

நீண்ட நேரமாக அவரையே கவனித்துக்கொண்டிருக்கிறேன். ஓரிடத்தில் நிலையாக நிற்கவில்லை அவர். ‘ஜல்லு காவோ?’ ‘பானி பியேகா?’ ‘வெள்ளம் குடிக்கணம்?’ - இப்படிப் பல மொழி களில் பேசியபடி வெள்ளை வெளேர் ஆடையில்  வலம்வருகிறார் நீலகண்டன்.

அது கோவை மாநகராட்சி நடத்தும் ஆதரவற்றோர் இல்லம். பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர்கள், ஆதரவின்றித் திரிந்தவர்கள், மனநலம் பாதித்தவர்கள் ஆகியோரை அங்கு பார்த்துக்கொள்ளும் பொறுப்பு நீலகண்டனுடையது.  நீலகண்டனும் அப்படி வந்து சேர்ந்தவர்தான் என்பதில் தொடங்குகிறது இந்தக் கட்டுரையின் மையப்புள்ளி.

x