நடுவானில் அரிதான விபரீதம்... வளிமண்டல தாக்கத்தால் கொந்தளித்த விமானம்; பயணிகளில் ஒருவர் பலி, 30 பேர் காயம்


சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்

நடுவானில் கொந்தளித்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தால் அதன் பயணிகளில் ஒருவர் பலியாகி இருக்கிறார்; மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆகாயத்தின் பரவசமூட்டும் விமானப் பயணத்தில் அவ்வப்போது விபரீதங்களுடனும் பயணிக்க நேரிடும். அப்படியொரு நிகழ்வாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த போயிங் ரக விமானம் ஒன்று, நடுவான் கொந்தளிப்புக்கு ஆளானதில் அதில் பயணித்தவர்கள் செத்துப் பிழைத்திருக்கிறார்கள். இந்த எதிர்பார சம்பவத்தில் பயணிகள் பலர் காயமடைய, அவர்களில் ஒருவர் பரிதாபமாக இறந்திருக்கிறார்.

நடுவானில் விமானம் கொந்தளிப்புக்கு ஆவதன் சித்தரிப்பு

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி நேற்று கிளம்பியது. விமானத்தில் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர். ஹீத்ரு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கி பறந்த விமானம், எதிர்பாராத விதமாக நடுவானில் கொந்தளிப்பை சந்தித்தது.

இதனையடுத்து பாங்காக்கின் ஸ்வர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக இன்று பிற்பகல் 3.45 மணிக்கு தரையிறக்கப்பட்டது. காயமடைந்த பயணிகளுக்கான மருத்துவ உதவிகள் வழங்கப்படும்போது, அவர்களில் ஒருவர் மரணமடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. கணிக்க இயலாத காற்று நகர்வுகள் உள்ளிட்ட வளிமண்டல உறுதியற்ற தன்மையால் நேரிடும் நடுவான் கொந்தளிப்புக்கு அவ்வப்போது விமானங்கள் ஆளாவது உண்டு.

நடுவான் கொந்தளிப்பு காரணமாக விமானத்தினுள் நிகழ்ந்த களேபரம்

ஆனபோதும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த போயிங் ரக விமானம், நடுவானில் நீடித்த மற்றும் கடுமையான கொந்தளிப்பால் தாக்குண்டது. இதில் விமானத்தின் பயணிகளில் 30 பேர் காயமடைந்தனர்; காயமடைந்த பயணிகளில் ஒருவர் இறந்ததை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும் உறுதி செய்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட விமானத்தின் பயணிகளுக்கு உதவ தனிக்குழுவை பாங்காக்கிற்கு அனுப்பியுள்ளதாகவும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

x