ஆசையோடு சாப்பிட்ட பான்பீடா; சிறுமியின் வயிற்றில் ஏற்பட்ட ஓட்டை... திரவ நைட்ரஜனின் கோர முகம்!


திரவ நைட்ரஜன் பீடாவில் சிறுமியின் வயிற்றில் விழுந்த ஓட்டை

பெங்களூருவை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், திரவ நைட்ரஜன் கொண்ட பான் பீடாவை சாப்பிட்டதால், வயிற்றில் ஓட்டை விழுந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது அங்கு வந்த உறவினர்களுக்கு, நிகழ்ச்சியில் திரவ நைட்ரஜன் கொண்ட பான் பீடா வழங்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கி ருசித்துள்ளனர். அப்போது இதன் ஆபத்தை உணராத 12 வயது அனன்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தனக்கும் இந்த திரவ நைட்ரஜன் கலந்த பான் பீடா வேண்டும் என்று அடம் பிடித்துள்ளார். இதனால் பெற்றோர் அவருக்கு அந்த பான் பீடாவை வாங்கி கொடுத்தனர்.

திரவ நைட்ரஜன் பீடா சாப்பிட்ட சிறுமியின் வயிற்றி ஓட்டை

இதை அருந்திய சில நாட்களிலேயே அந்த சிறுமிக்கு வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் பெங்களூருவில் உள்ள நாராயணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது, திரவ நைட்ரஜன் காரணமாக அவரது வயிற்றில் உள்ள திசுக்கள் சேதம் அடைந்திருப்பது தெரியவந்தது. எண்டோஸ்கோபி மூலம் வயிற்றுக்குள் கேமராவை செலுத்தி பார்த்தபோது, சுமார் 20 சதுர சென்டிமீட்டர் அளவிற்கு திசுக்கள் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

திரவ நைட்ரோஜென் கலந்த பீடா

இதனை மருந்து மற்றும் மாத்திரைகள் மூலம் குணப்படுத்த முடியாது என்பதால், அந்த பகுதியை வெட்டி எடுப்பது என மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட திசுக்கள் மொத்தமாக வெட்டி எடுக்கப்பட்டதால், அந்த இடத்தில் சிறுமிக்கு வயிற்றில் ஓட்டை ஏற்பட்டது. அறுவை சிகிச்சை மூலம் அந்த பகுதியில் தையல் போடப்பட்டுள்ளது. தற்போது சிறுமி நலமுடன் இருப்பதாகவும், ஆனால் திரவ நைட்ரஜன் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை இந்த சம்பவம் ஏற்படுத்துவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திரவ நைட்ரோஜென் கலந்த உணவுகள்

சமீபத்தில் திரவ நைட்ரஜன் உணவு அருந்திய சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் திரவ நைட்ரஜன் கொண்டு உருவாக்கப்படும் உணவு வகைகளை விற்பனை செய்யவும், நிகழ்ச்சிகளின் போது வழங்கவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

x