மாம்பழங்களை பழுக்கச் செய்ய கால்சியம் கார்பைடு பயன்படுத்தக் கூடாது... உணவு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு


மாம்பழங்களை பழுக்கச் செய்யும் கால்சியம் கார்பைடு

பழங்களை பழுக்க வைப்பதற்காக, தடை செய்யப்பட்ட கால்சியம் கார்பைடை பயன்படுத்தக் கூடாது என, வணிகர்கள் மற்றும் உணவு வணிக நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வெளியிட்டுள்ள ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையில், "கால்சியம் கார்பைடு கொண்டு செயற்கையாக பழுக்க வைப்பதற்கான தடையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பழுக்க வைக்கும் அறைகளை இயக்கும் வர்த்தகர்கள், பழங்கள் கையாளுபவர்கள், உணவு வணிக ஆபரேட்டர்கள் உள்ளிட்டோர் இதன்பொருட்டு எச்சரிக்கப்படுகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம்

இந்த மாம்பழ சீஸனில், கால்சியம் கார்பைடு கொண்டு பழங்களை செயற்கையாக பழுக்க வைப்பது தொடர்பான புகார்கள் அதிகரித்தன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

எஃப்எஸ்எஸ் சட்டம், 2006 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் உணவுப் பாதுகாப்புத் துறைகள் விழிப்புடன் இருக்கவும், தீவிர நடவடிக்கை எடுக்கவும், தடையை மீறி சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கவும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

"பொதுவாக மாம்பழம் போன்ற பழங்களை பழுக்க வைக்கும் கால்சியம் கார்பைடு, ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸின் தீங்கு விளைவிக்கும் தடயங்களைக் கொண்ட அசிட்டிலீன் வாயுவை வெளியிடுகிறது. வர்த்தகர்கள் மத்தியில் ’மசாலா' என்றும் அழைக்கப்படும் இந்த பொருட்கள், தலைச்சுற்றல், நீடித்த தாகம், எரிச்சல், பலவீனம், விழுங்குவதில் சிரமம், வாந்தி மற்றும் தோல் புண்கள் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்" என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, அசிட்டிலீன் வாயுவானது அதைக் கையாளுபவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாம்பழம்

மேலும் பயன்படுத்தும் போது கால்சியம் கார்பைடு பழங்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பழங்களில் ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸின் எச்சங்களை விட்டுச்செல்லும் வாய்ப்புகளும் உள்ளன என்பதால் பழங்களை பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு பயன்படுத்துவது உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (விற்பனை மீதான தடை மற்றும் கட்டுப்பாடுகள்) விதிமுறைகள், 2011-ன் கீழ் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட கால்சியம் கார்பைட்டின் பரவலான பயன்பாட்டின் சிக்கலைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் பழங்கள் பழுக்க வைப்பதற்கு பாதுகாப்பான மாற்றாக எத்திலீன் வாயுவைப் பயன்படுத்த இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த எத்திலீன் வாயுவை 100 பிபிஎம் வரை செறிவுகளில் பயன்படுத்தலாம்.

இயற்கையான எத்திலீன், தொடர்ச்சியான இரசாயன மற்றும் உயிர்வேதியியல் செயல்பாடுகளைத் தொடங்கி கட்டுப்படுத்துவதன் மூலம் பழுக்க வைக்கும் செயல்முறையை ஒழுங்குபடுத்துகிறது. பழுக்காதவற்றை எத்திலீன் வாயுவுடன் சிகிச்சையளிப்பது, பழம் கணிசமான அளவில் எத்திலீனை உற்பத்தி செய்யத் தொடங்கும் வரை இயற்கையான பழுக்க வைக்கும் செயல்முறையைத் தூண்டுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x