டெங்கு பரவலை தடுக்க அதிரடி... 1000 இடங்களில் நாளை மருத்துவ முகாம்! வீடு தேடி வருகிறது நிலவேம்பு கசாயம்


அமைச்சர் மா.சுப்பிரமணியன்

``தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக வீடு வீடாக நிலவேம்பு மற்றும் பப்பாளிச்சாறு வழங்கப்படும்'' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நிலவேம்புச்சாறு

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதேபோல் வெயிலும், மழையும் மாறி மாறி வருவதால் பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குநர்கள் மற்றும் நகர் நல அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மறு உத்தரவு வரும் வரை நாளை முதல் தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

மூவர் அல்லது அதற்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அந்த இடத்திற்கு முன்னுரிமை அளித்து முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்து முகாம் நடத்த வேண்டும். வீடு வீடாக சென்று டெங்கு, ப்ளூ காய்ச்சல் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே போல் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளவும், அறிகுறிகள் இருந்தால் அதற்கான உரிய சிகிச்சைகள் வழங்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பப்பாளிச்சாறு

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், டெங்கு காய்ச்சல் பரவல் கட்டுக்குள் உள்ளது. இருந்த போதிலும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. மேலும் பொதுமக்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று நிலவேம்புச்சாறு மற்றும் பப்பாளி இலைச்சாறு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது’’ எனக் கூறினார்.

x