சர்க்கரை சேர்க்கையை குறைத்தது போர்ன்விடா... சமூக ஊடக சாடலுக்குப் பின்னர் நடவடிக்கை


போர்ன்விடா

இந்தியாவின் பிரபல ஆரோக்கிய பானங்களில் ஒன்றான போர்ன்விடாவுக்கு எதிராக, சமூக ஊடக ஆர்வலர் ஒருவர் பதிவிட்டது சர்ச்சையானதை அடுத்து, போர்ன்விடாவில் சர்க்கரை அளவை அந்த நிறுவனம் தானாக முன்வந்து குறைத்துள்ளது.

இந்தியாவின் இளம் சமூக ஊடக பிரபலங்களில் ஒருவர் ரேவந்த் ஹிமந்த்சிங்கா. ஏப்ரல் மாதம் மத்தியில் இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஒரு வீடியோ பெரும் சர்ச்சையானது. இந்தியாவின் பிரபல ஆரோக்கிய பானங்களில் ஒன்றான போர்ன்விடாவுக்கு எதிராக அந்த வீடியோ அமைந்திருந்தது. போர்ன்விடா ஆரோக்கிய பானத்தின் கவரில் குறிப்பிடப்பட்டிருந்த புள்ளி விவரங்களை வைத்தே, போர்ன்விடாவுக்கு எதிராக அந்த வீடியோவில் ரேவந்த் முழங்கியிருந்தார்.

ஆரோக்கிய பானத்தில் ஆரோக்கியத்தை விட குழந்தைகளுக்கு நீரிழிவை உருவாக்கும் காரணிகளே அதிகரித்திருப்பதாக தொடங்கும் அந்த வீடியோ, போர்ன்விடா தனித்துவ நிறத்துக்கு காரணமான நிறமி, புற்றுநோய்க்கு வித்திடக்கூடியது என்று முடிந்திருக்கும். குறிப்பாக போர்ன்விடாவில் அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும் சர்க்கரையின் அளவு குறித்தும் ரேவந்த் கவலை தெரிவித்திருந்தார். இந்த அதிகப்படி சர்க்கரை அளவு குழந்தைகள் மத்தியில் மிகைபருமன் மற்றும் அது தொடர்பான இதர பிரச்சினைகளுக்கு காரணமாவதாகவும் அவர் விமர்சித்திருந்தார்.

இதற்கு போர்ன்விடா நிறுவனம் கடுமையாக எதிர்வினையாற்றியது. ’70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் மக்களின் அபிமானத்தை பெற்றிருக்கும் போர்ன்விடாவின் நற்பெயருக்கு ரேவந்த் ஊறுவிளைவித்து விட்டார்; அவரது வாதங்கள் அனைத்தும் அறிவியல் முறைக்கு அப்பாற்பட்டது; எங்களது தயாரிப்பு அனைத்தும் முழுமையான பரிசோதனை மற்றும் உணவு அறிவியலாளார்களின் வழிகாட்டுதலின் கீழாகவே தயாரிக்கப்படுகின்றன’ என்றெல்லாம் வாதங்களை அடுக்கியது.

ரேவந்த் ஹிமந்த்சிங்கா

மேலும், தங்களது நற்பெயரை நாசம் செய்திருப்பதாக ரேவந்துக்கு எதிராக சட்டரீதியிலான நடவடிக்கையையும் முன்னெடுத்தது. இதனையடுத்து, மேற்படி வீடியோவை தனது அனைத்து சமூக ஊடக தளங்களில் இருந்தும் நீக்கிய ரேவந்த் “போர்ன்விடாவை விமர்சித்ததற்காக இந்தியாவின் மிகப்பெரும் சட்ட நிறுவனம் எனக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதனை எதிர்கொள்ளும் திராணி எனக்கில்லை” என்ற விளக்கத்தோடு, போர்ன்விடாவிடம் மன்னிப்பும் கேட்டிருந்தார். தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து போர்ன்விடா விமர்சன வீடியோவை ரேவந்த் அகற்றியபோதும், அதன் பிரதிகள் இணையத்தை சூறாவளியாக சுழன்றடித்தன.

அதன் விளைவாக தற்போது போர்ன்விடா நிறுவனம் இறங்கி வந்துள்ளது. சர்ச்சை எழுந்த 8 மாதங்கள் கழித்து, போர்ன்விடாவில் உள்ள சர்க்கரையின் அளவை சுமார்14 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலும், போர்ன்விடா பேக்கிங்கின் மேற்புறத்தில் வெளியான, புள்ளி விவரங்களில் இருந்தே பெறப்பட்டுள்ளன. 8 மாதங்கள் கடந்து தனது கோரிக்கை பலித்திருப்பதாக தற்போது ரேவந்த் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

போர்ன்விடாவுக்கு எதிரான போரில் வெற்றி கிடைத்ததாக அறிவிக்கும் ரேவந்த்

போர்ன்விடா என்ற ஒற்றை நிறுவனத்துக்கு எதிராக மட்டுமன்றி, ஆரோக்கிய பானங்கள் மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு ரகங்களின் பெயரில் இந்தியர்களை ஆட்டுவிக்கும் நிறுவனங்கள் மற்றும் அவர்களின் தயாரிப்புகளுக்கு எதிராகவும் ரேவந்த் ஹிமந்த்சிங்கா தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

x