காதலர்களின் அந்தரங்க சேட்டைகளுக்கான இடமாக மெட்ரோ ரயில்கள் மாறி வருவது குறித்து பொதுவெளியில் புகார்கள் அதிகரித்து வருகின்றன.
இந்திய மெட்ரோ ரயில்கள் நவீனத்தின் அடையாளமாக மாறி உள்ளன. அதில் பயணிக்கும் இளசுகளும் அந்த நவீனத்தின் பிரதிநிதிகளாக, மேலைநாட்டினர் பாணியில் தங்களுக்கான சுதந்திரத்தை தங்கள் இஷ்டப்படி கட்டமைத்துக் கொள்கிறார்கள். வாலிப வயதின் தினவுக்காக, அந்தரங்க சேட்டைகளில் சில ஜோடிகள் மூழ்குவதும் இதில் அடங்கும்.
குறிப்பாக டெல்லி மெட்ரோ ரயில்களில் இந்த அடல்ட் ஒன்லி காட்சிகள் அதிகம் அரங்கேற ஆரம்பித்திருக்கின்றன. ஆரத்தழுவிய ஜோடிகள், முத்த ஆராய்ச்சியில் ஈடுபடுவோர், அப்படியே சேட்டைகளின் அடுத்த கட்டத்துக்கு நகர்வோர்... என டெல்லி மெட்ரோ பயணிகள் மத்தியில் முகம் சுளிக்கச் செய்யும் காட்சிகள் அதிகரித்து வருகின்றன.
இவற்றை காணச்சகியாத பயணிகள் அவற்றை புகைப்படம் மற்றும் வீடியோவாக்கி, சமூக ஊடக தளங்களில் பதிவிட்ட பிறகும் எவரும் அடங்குவதாக தெரியவில்லை. நாளுக்கு நாள் இளசுகளின் வரம்பு மீறல் அதிகரித்து வருவதை அடுத்து, இந்த விவகாரத்தில் மெட்ரோ நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரி வருகிறார்கள்.
இவை மட்டுமன்றி அரைகுறை ஆடைகளுடன் பயணிப்பது, புகை மற்றும் மது பிரயேகங்கள் என தலைநகரத்து மெட்ரோ ரயில் பயணம் அதன் சக பயணிகளுக்கு பெரும் தலைவலியாக மாறி வருகிறது. இதனிடையே இப்படி வெளிநாட்டு மோகத்திலான மாற்றத்தை வரவேற்போர், இந்தப் போக்கினை தனிப்பட்டோர் சுதந்திரம், நாகரீகத்தின் உச்சம் என்றெல்லாம் உச்சிமுகர்ந்து வருகின்றனர்.