அலர்ட்... டெங்கு பரவல் அதிகரிப்பால் 1,000 சிறப்பு முகாம்கள்... அமைச்சர் அறிவிப்பு!


டெங்கு கொசு

தமிழ்நாட்டில் வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் அக்டோபர் 1-ம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கான தனி மருத்துவப் பிரிவை உருவாக்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரே வாரத்தில் 100-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்தது. இதேபோல் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 200-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் டெங்கு பரவலைத் தடுக்க வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் 1,000 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மா. சுப்பிரமணியன்

இதுதொடர்பாக மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம், "டெங்குவைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் அக்டோபர் 1-ம் தேதி, 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். டெங்கு மற்றும் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கையாக முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மேலும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு கஷாயம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மழைக்காலங்களில் வீடுகளில் தேவையின்றி தண்ணீர் தேங்கியிருப்பதை அப்புறப்படுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக கூறி வருகிறோம். மருத்துவ துறையின் சார்பில் இதில், 476 மருத்துவ நடமாடும் மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

x