பெரும் சோகம்... கருகிய பயிரைப் பார்த்து நெஞ்சுவலி; வயலிலேயே விவசாயி உயிரிழப்பு


உயிரிழந்த விவசாயி ராஜ்குமார்

சாகுபடி செய்யப்பட்டிருந்த குருவைப் பயிர்கள் நீரின்றி காய்ந்து கருகிப் போனதால் அதிர்ச்சியில் விவசாயி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருகியப் பயிர்

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அடுத்த திருவாய்மூர் பகுதியை சேர்ந்தவர் எம்.கே. ராஜ்குமார் (47). விவசாயியான இவர் இந்த ஆண்டு மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்பட்டதால் சுமார் 15 ஏக்கர் அளவிலான விளைநிலத்தில் குறுவை சாகுபடி செய்திருந்தார். ஆனால் கர்நாடகத்திலிருந்து நீர்வரத்து சரியாக இல்லாததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது.

அதனால் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவும் 6000 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் நீரின்றி கருகின. பல ஆயிரம் ஏக்கரில் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் குருவை சாகுபடி நாசமானது. விவசாயி ராஜ்குமாரின் குருவைப் பயிரும் முற்றிலுமாக கருகி வீணானது. இதனால் அவர் கவலையில் இருந்து வந்துள்ளார்.

கருகியப் பயிர்

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் வயலுக்கு சென்ற அவர், காய்ந்த நெற்பயிர்களை டிராக்டர் மூலம் அழித்து சம்பா சாகுபடிக்கான நேரடி நெல் விதைப்பு பணியை மேற்கொண்டுள்ளார். அப்போது சோகம் தாங்காமல் திடீரென நெஞ்சுவலி வந்து வயலிலேயே மயங்கி விழுந்தார். அவரை சக விவசாயிகள் மீட்டு திருக்குவளையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கிருந்து உடனடியாக மேல் சிகிச்சைக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாகுபடி பொய்த்துப் போனதால் விவசாயி மாரடைப்பால் உயிரிழந்திருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x