நிபா வைரஸ் தடுப்பு முகாமில் கிருஷ்ணசாமி திடீர் ஆய்வு... கேரள எல்லையில் பரபரப்பு!


கிருஷ்ணசாமி ஆய்வு

தமிழக கேரள எல்லையில் நிபா வைரஸ் தொற்று தடுப்பு முகாமில் புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி ஆய்வு செய்தார்.

தமிழக கேரளா எல்லையான தென்காசி மாவட்டம் கோட்டை வாசலில் புதிய தமிழகம் கட்சியினுடைய நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அவர் புளியரையில் உள்ள தமிழக அரசால் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் அதனை தடுக்கும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமினையும் பார்வையிட்டார்.

கிருஷ்ணசாமி

இதன் பின்னர் அவர் செய்தியாளர்கள் மத்தியில் கூறும் பொழுது, “கோட்டை வாசலில் இருந்து புளியரை வரை மூன்றரை கிலோமீட்டர் தொலைவில் சோதனை சாவடி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு அரிசி உள்ளிட்டவையில் கடத்துவதற்கு வசதியாகவும் வாய்ப்பாகும் உள்ளது. எனவே சோதனை சாவடிகளை கோட்டைவாசல் பகுதியில் அமைக்க வேண்டும். புளியரையில் அமைக்கப்பட்டுள்ள நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு முகாம் முழுமையாக கண்துடைப்புக்காக அமைக்கப்பட்டுள்ளதாகும். அதில் மருத்துவர்கள் உள்ளிட்ட யாரும் பணியில் அமர்த்தப்படவில்லை. மூன்று மருத்துவ பணியாளர்கள் மட்டுமே அங்கே பணியில் அமர்த்த பட்டுள்ளனர். இதனை தமிழக அரசு உடனடியாக கண்காணித்து கூடுதல் பணியாளர்களை நியமித்து தடுப்பு முகாமை மேம்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், ஒப்புக்காக இங்கு நிபா வைரஸ் முகம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவதாகவும், ஒரு நிமிடத்திற்கு 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த வழியை கடந்து செல்வதாகவும், உண்மையாக சோதனைகள் இங்கு நடக்கவில்லை என்றும், இது தமிழக அரசின் மெத்தன போக்கை காட்டும் செயலாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

x