செல்லப்பிராணிகள் வளர்க்கும் மக்களே எச்சரிக்கை... வேகமாக பரவுகிறது பார்வோ வைரஸ்!


நாய்களிடையே வேகமாக பரவும் பார்வோ வைரஸ்

பார்வோ வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்படும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கால்நடைகளில் குறிப்பாக நாய்களிடையே வேகமாக பரவக்கூடியது கெனைன் பார்வோ வைரஸ் தொற்று. காற்றின் மூலமாக பரவும் இந்த நோய் விலங்குகளுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும். பார்வோ வைரஸ் தொற்று ஏற்பட்ட நாய்கள் சோர்வுடன் காணப்படும் நிலையில், தொடர்ச்சியாக வாந்தி, ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்படும். உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் நாய்கள் இறக்க நேரிடும்.

பார்வோ வைரஸால் பாதிக்கப்பட்ட நாய்களின் எச்சம், சிறுநீர், மலத்திலிருந்து கிருமிகள் காற்றில் பரவி பிற நாய்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும்.

நாய்களிடையே வேகமாக பரவும் பார்வோ வைரஸ்

அதே வேளையில் தடுப்பூசி செலுத்தினால் நோய் ஏற்படாமல் நாய்களைப் பாதுகாக்கலாம். பொதுவாக நாய்களுக்கு 3 தவணை பார்வோ வைரஸ் தடுப்பூசிகளும், இரண்டு தவணை ரேபிஸ் தடுப்பூசிகளும் செலுத்த வேண்டும்.

ஆனால், வீட்டில் வளர்க்கும் பிராணிகள் பலவற்றிற்கு அதன் உரிமையாளர்கள் இதனை சரிவர செலுத்துவதில்லை என கூறப்படுகிறது. இதன் விளைவாக தற்போது பார்வோ வைரஸ் நோய் அதிகரித்திருப்பதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் மட்டும் நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட நாய்கள் பார்வோ வைரஸ் பாதிப்புடன் சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைகளுக்கும், தனியார் கிளினிக்குகளுக்கும் அழைத்து வரப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாய்களிடையே வேகமாக பரவும் பார்வோ வைரஸ்

பெரும்பாலும் மழைக்காலங்களில் இந்த வைரஸ் வேகமாக பரவக்கூடியதாகும். ஜூன், ஜூலை மற்றும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த காலக்கட்டங்களில் சென்னையில் நாளொன்றுக்கு 130 முதல் 150 நாய்கள் வரை பார்வோ வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அழைத்து வரப்படும்.

ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை இரண்டு மடங்கு வரை அதிகரித்துள்ளது. முறையாக தடுப்பூசிகள் செலுத்தாமல் தவறவிடுவதே இந்த வைரஸ் அதிக அளவில் பரவுவதற்கான முக்கியமான காரணமாகும்.

ரேபிஸ் தடுப்பூசியின் விலை ரூ.50க்கும் குறைவு என்ற நிலையில், பார்வோ வைரஸ் தடுப்பூசி ரூ.300க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் அந்த தடுப்பூசிகளை தங்களது செல்ல பிராணிகளுக்கு செலுத்துவதில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த பாதிப்பு அதிகரித்து உள்ளதால் செல்லப் பிராணிகள் வளர்த்து வரும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x