சுற்றுலா தினம்: உதகை படகு இல்ல கட்டணத்தில் 50% சலுகை அறிவிப்பு


உதகை: சுற்றுலா தினத்தை முன்னிட்டு, நாளை (செப்டம்பர் 27) உதகை படகு இல்லத்தில் கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்பட்டுவதாக சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது.

மலைகளின் அரசியான உதகைக்கு பருவ காலம் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு அதிக அளவில் வருகை தருகின்றனர். அவ்வாறு வருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்கு கடந்த 50 ஆண்டு காலமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பல்வேறு சலுகைகள் மற்றும் வசதிகளை செய்து வருகிறது.

இது குறித்து சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் குணேஸ்வரன் கூறியதாவது: "நீலகிரி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் கூடிய உதகை படகு இல்லலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்வுடன் படகு சவாரி செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் டோநட் படகு என அழைக்கப்படும் புது வித படகு சவாரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்படகில் அமர்ந்து சிற்றுண்டி மற்றும் தேநீர் அருந்திக் கொண்டே படகு சவாரி செய்வதுடன், உதகை ஏரியின் அழகை கண்டு ரசிக்கலாம்.

இப்படகில் படகு சவாரி செய்வதற்கு 5 நபர்களுக்கு ரூ.1,200 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இக்கட்டணத்தில் சிற்றுண்டி மற்றும் தேநீர் இலவசமாக வழங்கப்படும். சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நின்று சிரமப்படாமல் படகு சவாரிக்கு முன் பதிவு செய்ய இணையதளம் மற்றும் க்யூஆர் குறியீடு முறையிலும் சுலபமாக முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான க்யூஆர் குறியீடுகள் உதகையின் முக்கியமான சுற்றுலாத் தலங்களான, தொட்ட பெட்டா, பைக்காரா, தாவரவியல் பூங்கா, ஒட்டல் தமிழ்நாடு உதகை அலகு I மற்றும் II, சிம்ஸ் பூங்கா மற்றும் கர்நாடக பூங்கா ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தி படகு இல்லம், உதகையில் படகு சவாரி செய்ய முன் பதிவுகள் செய்லாம். மேலும், படகு இல்லத்திலுள்ள பொழுதுபோக்கு விளையாட்டுகள் மற்றும் சிறுவர் ரயில் ஆகியவற்றிற்கு உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 27ம் தேதியான நாளை ஒருநாள் மட்டும் 50 சதவீத சலுகைக் கட்டணம் வழங்கப்படுகிறது" என்று மேலாளர் குணேஸ்வரன் கூறினார்.

x