அடுத்த 30 வருஷத்துக்கு மாதந்தோறும் ரூ.10,37,000 பரிசு... 70 வயது பாட்டிக்கு லாட்டரியில் அதிர்ஷ்டம்!


மகிழ்ச்சியில் டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ்

இங்கிலாந்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டிக்கு லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது. அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் அவருக்கு 10.37 லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

கணவருடன் டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ்

இங்கிலாந்தின் டோர்கிங்கைச் சேர்ந்தவர் டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ்(70). இவரது கணவர் கீத். டோரிஸ் தனது 70வது பிறந்த நாளைக் கொண்டாட தயாராகி வந்தார். அப்போது, அவரது வீடு மற்றும் தோட்டத்தில் மணி ஸ்பைடர் என்ற சிலந்தியைப் பார்த்தார்.

இந்த சிலந்தியைப் பார்த்தால் அந்த நபருக்கு பணம் வரும் என்று இங்கிலாந்து மக்கள் நம்புகிறார்கள். ஸ்டான்பிரிஜ்சும் அதை நம்பினார். இதையடுத்து ஆக.3ம் தேதியன்று நேஷனல் லாட்டரியை டோரிஸ் வாங்கினார். அதில் செட்ஃபார் லைஃப் டிராவில் அவர் வென்றுள்ளார். அதன்படி அடுத்த 30 ஆண்டுகளுக்கு 10,000 பவுண்டுகளை (நம்மூர் மதிப்பில் சுமார் ரூ.10.37 லட்சம்) வென்றுள்ளார்.

இதன்படி டோரிஸ், ஒவ்வொரு மாதமும் இந்த பரிசுத் தொகையைப் பெறுவார். இந்த பணம், தான் 100 வயது வரை வாழ்வதற்கான காரணமாக அமையும் என்று டோரிஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டோரிஸ் கூறுகையில், 'இது எனது 70வது பிறந்தநாள் விழா என்பதால் நாங்கள் பிஸியாக இருந்தோம். இதற்கிடையில் தேசிய லாட்டரியிலிருந்து ஒரு மின்னஞ்சலைப் பார்த்தேன். அதில்,'வாழ்த்துக்கள், நீங்கள் 30 ஆண்டுகளுக்கு மாதந்தோறு ரூ.10.37 லட்சம் வென்றுள்ளீர்கள்' என்ற செய்தியைப் பார்த்தேன். இதைவிட மகிழ்ச்சி என்ன வேண்டும்" என்றார்.

லாட்டரியில் விழுந்த தொகையுடன் மகிழ்வான வாழ்க்கையை தனது குடும்பத்துடன் வாழ இருப்பதாக டோரிஸ் தெரிவித்துள்ளார்.

x