காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்ல அனுமதி?: கேரளா சென்ற தமிழகக்குழு பரபரப்பு தகவல்!


காட்டுப்பன்றிகள்

கேரளாவில் உள்ளது போல், தமிழகத்திலும் பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளைச் சுட்டுக்கொல்ல அனுமதியளிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக வன உயிரின மோதல் தடுப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்துள்ள கோவை, நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் காட்டு யானைகள் மற்றும் காட்டுப் பன்றிகளால் விவசாய பயிர்கள் சேதமாகி வருகிறது. யானைகளால் ஒரு சில இடங்களில் மட்டும் சேதம் ஏற்பட்டாலும் காட்டுப் பன்றிகளால் அதிகளவிலான சேதங்கள் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

கோவை வனக்கோட்டத்தில் தடாகம், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் காட்டுப் பன்றிகளால் நாள்தோறும் விவசாயப் பயிர்கள் சேதமாவதால் காட்டுப் பன்றிகளை வனத்துறையினர் கட்டுப்படுத்தக் கோரி மனுக்களை அளித்தும், அடையாள ஆர்ப்பாட்டங்களிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு வன உயிரின மோதல் தடுப்பு குழு கேரளாவில் சுற்றுப்பயணம்

கோவைக்கு அருகில் உள்ள கேரளா மாநிலத்தில் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த, விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளைச் சுட்டுக்கொல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது போல் தமிழகத்திலும் விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளைச் சுட்டுக்கொல்ல அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து வனத்துறை சார்பில் தமிழ்நாடு வன உயிரின மோதல் தடுப்புக்குழு உருவாக்கப்பட்டு, மாவட்ட வன அலுவலர்கள் தலைமையில் விவசாயிகளில் ஒருவர் பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டு அக்குழுவினர் வன விலங்குகளால் ஏற்படும் சேதங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

கேரள மாநில வனத்துறையினருடன் தமிழக குழு ஆலோசனை

கோவையைச் சேர்ந்த இக்குழுவினர் கேரளா மாநிலம், பாலக்காடு சென்று, அம்மாநில அரசு காட்டுப்பன்றிகளை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதை ஆய்வு செய்தும், அம்மாநில வனத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடி வந்துள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், ”தமிழ்நாடு தலைமை வனப் பாதுகாவலர் தலைமையில் இக்குழு குழு கேரள மாநிலம் பாலக்காடு சென்றது. காட்டுப் பன்றிகளால் அதிக சேதம் ஏற்படும் பகுதிகளில் அந்தந்த ஊராட்சிகளே அனுமதி பெற்ற துப்பாக்கி சுடும் வல்லுநர்களைக் கொண்டு காட்டுப் பன்றிகளை சுட்டு வருகின்றனர். இந்த முறை அங்குள்ள விவசாயிகளுக்கு கை கொடுத்துள்ளது. அதே போன்றே தமிழகத்திலும் செயல்படுத்த ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது” என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி பெரியசாமி கூறுகையில், ”கேரள மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் விளைநிலங்களில் புகும் காட்டுப் பன்றிகளைச் சுட்டுக் கொல்ல அனுமதி வழங்கிய நிலையில், தற்போது அந்த நடைமுறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வனத்துறை காட்டுப் பன்றிகளை சுட்டு வந்த நிலையில், தற்போது அதிகம் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கிராம ஊராட்சியே துப்பாக்கிச் சுடும் நபர்களை வைத்து காட்டுப் பன்றிகளைச் சுட்டு வருகிறது.

இதனால் பயிர் சேதம் குறைந்துள்ளது. அந்த நடைமுறை இங்கு செயல்படுத்தப்பட்டால் விவசாயிகளுக்கு அதிக நன்மை ஏற்படும். காட்டுப் பன்றிகளால் அதிக அளவில் சேதங்களைச் சந்தித்து வருகிறோம். கேரள மாநிலத்தில் வன விலங்குகளால் விவசாயப் பயிர்கள் சேதம் அடைந்தால் அதிக இழப்பீடு வழங்கி வரும் நிலையில், அதே போன்று தமிழகத்திலும் வனவிலங்குகளால் விவசாயப் பயிர்கள் சேதம் அடைந்தால் அதிக இழப்பீடு தர வேண்டும்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

x