சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று 44 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கூடுதலாக பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் நாள் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். இதில் கடற்கரை - தாம்பரம் இடையேயான வழித்தடம் மிகவும் முக்கியமானது ஆகும். இந்த சூழலில், கடந்த சில வாரங்களாகவே, பாராமரிப்பு பணிகள் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரயில்கள் கணிசமாக ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
கோடம்பாக்கம் மற்றும் தாம்பரம் இடையே இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுவதால் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் அரக்கோணத்திற்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை இயக்கப்படும் 22 மின்சார ரயில்களும், மறு மார்க்கமாக தாம்பரம் மற்றும் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை இயக்கப்படும் 20 மின்சார ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றது.
அதே நேரத்தில் பயணிகளின் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு இன்று காலை 11.55, 12.45, 1.25,1.45, 1.55, பிற்பகல் 2.40, 2.55 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில்களை கூடுதலாக இயக்கவுள்ளது. சென்னை மெட்ரோ ரயில்கள் இன்று ஒருநாள் மட்டும் காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் 7 நிமிடத்திற்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதேபோல புற நகர் ரயில்கள் ரத்து காரணமாக பயணிகள் கூட்டம் அலைமோதும் என்பதால் சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் 150 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.