வைரல் வீடியோ; ஒரே தோசையில் குட்டியாய் எட்டு கரப்பான் பூச்சிகள்... மெட்ராஸ் காபி ஹவுஸ் மீது பகீர் புகார்


கரப்பான் தோசை - சித்தரிப்பு படம்

ருசியான உணவுக்காக ஆசையோடு உணவகம் செல்லும் வாடிக்கையாளர்களை அச்சுறுத்தும் வகையில், அவர்களுக்கு பரிமாறப்படும் உணவில் பூச்சிகள் கிடப்பது வாடிக்கையாகி வருகிறது.

டெல்லியின் பிரபல உணவகம் ஒன்றில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் தனக்கான உணவில் எட்டு கரப்பன் பூச்சிகளை கண்டறிந்தது, இணையத்தில் வீடியோவாக பகிரப்பட்டதில் வைரலாகி உள்ளது.

டெல்லியின் கானாட் பிளேஸ் பகுதியில் செயல்படும் மெட்ராஸ் காபி ஹவுஸ் உணவகத்தில் இந்த அதிருப்திக்குரிய அவலம் நடந்திருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவு வாயிலாக பகிர்ந்திருக்கிறார். கடந்த வாரம் நேரிட்ட இந்த சம்பவத்தின்போது, தோழியுடன் உணவகம் சென்ற இஷானி என்ற பெண், தலா ஒரு தோசை ஆர்டர் செய்திருக்கிறார். ஆர்டரின் பிரகாரம் அவர்களுக்கு சுவையான பொடி தோசை பரிமாறப்பட்டது.

அந்த தோசையை விண்டு வாயிலிட்டு சுவைத்த இஷானி முகம் அஷ்டகோணலானது. சைவ உணவுப் பிரியரான இஷானி, தோசையில் சைவம் இல்லை என்பதை உடனே புரிந்துகொண்டார். உடனடியாக தோசையை பிரித்து ஆராய்ந்தார். அங்கே அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஒன்று இரண்டல்ல; எண்ணியதில் குட்டிக்குட்டியாய் எட்டு கரப்பான்பூச்சிகளை, ஒரே தோசையில் இஷானியும் அவரது தோழியும் அடையாளம் கண்டார்கள். இந்த ஆராய்ச்சியை அவர்கள் வீடியோ எடுக்கவும், உணவக சிப்பந்திகள் சுதாரித்தனர்.

உணவக ஊழியர்கள் தோசைகளை பறித்துச் சென்றதால் வீடியோவை முழுமையாக எடுக்க முடியவில்லை என்று குறைபட்ட இஷானிக்கு அதன் பின்னரும் கசப்பான அனுபவம் தொடர்ந்தது. உணவகத்தினரால் தான் மிரட்டப்பட்டதாகவும், பேரம் பேசப்பட்டதாகவும் பின்னர் தெரிவித்தார். தொடர்ந்து போலீஸார் முதல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வரை பல தரப்பினரிடமும் இஷானி புகார் அளித்திருக்கிறார்.

மெட்ராஸ் காபி ஹவுஸ் தோசை

அத்தோடு நின்றுவிடாது தனக்கு கிடைத்த மோசமான அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராமில் விரிவாக பதிவிட்டிருக்கிறார். ”ஒரு புகழ்பெற்ற உணவகம் எப்படி இவ்வளவு கவனக்குறைவாக இருக்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை. அவர்களின் சமையலறையை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. துர்நாற்றம் வீசுகிறது. பாதிக்கு கூரை இல்லை. உணவகத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைக்கையை அப்படியே விடமாட்டேன். தோசையில் கரப்பான் பூச்சி பரிமாறிய உணவகத்தினர் என்னை மிரட்டவும், சமாதானப்படுத்தவும் முயன்றனர்.

எனக்கு பரிமாறியது போன்று ஒரே தோசையில் எட்டு கரப்பான்களை உங்களில் ஒரு சைவ உணவாளர் சாப்பிட்டு காட்டட்டும் என அவர்களிடம் நிபந்தனை வைத்தேன். அவர்கள் தவறை உணர்ந்திருப்பார்கள் என நம்புகிறேன்” என்று இஷானி பதிவிட்டிருக்கிறார். இதனையடுத்து அந்த உணவகம் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு மற்றும் வருத்தம் தெரிவித்தது. இந்த வைரல் பதிவுக்கு, சக நெட்டிசன்கள் மத்தியில் விழிப்புணர்வுக்கான பாராட்டும் வரவேற்பும் கிடைத்து வருகிறது.

x