தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் ஆசிரியர்கள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பிக்க பள்ளிக் கல்வித்துறை புதிய முடிவு செய்துள்ளது. முன்னதாக இதற்கு கணினி ஆய்வகம் உள்ளிட்ட திட்டங்கள் செய்யப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணிக்காக கையடக்க கணினி ( டேப்லெட்) வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதில் முதற்கட்டமாக 79723 டேப்லெட்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளிகள், பள்ளிக்கல்வித் துறை சார்பில் கோரப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு வரை இது போல சாதனங்கள் தமிழக அரசின் எல்காட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படும். ஆனால், இந்த முறை வெளி நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய இருக்கிறது. இதன் மூலம் மாணவர்களின் கல்வித்திறன் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.