உத்தரப் பிரதேச மாநிலதில் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் அங்குள்ள மருத்துவமனைக்கு நோயாளி போல சென்று, காலாவதியான மருந்துகளை கண்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஃபிரோசாபாத் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் (எஸ்டிஎம்) ஆக இருந்து வருபவர் க்ரதி ராஜ். 2021 பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவரிடம், அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் காலாவதி மருந்துகள் விநியோகம், பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லாதது போன்றவை குறித்து புகார்கள் சென்றன.
இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக நேரடி விசாரணை நடத்துவதற்காக, க்ரதி ராஜ், தலையில் முக்காடு அணிந்துகொண்டு நோயாளி போல அந்த மருத்துவமனைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்றார். அப்போது மருந்தகத்தில் காலாவதியான மருந்துகள் இருந்ததை அவர் கண்டறிந்தார். மேலும் ஊசி, மருந்துகள் நோயாளிகளுக்கு சரியாக வழங்கப்படவில்லை. அங்குள்ள மருத்துவரிடம் சிகிச்சைக்கு வந்தது போன்று அவர் பரிசோதனை செய்துகொண்டார்.
அப்போது மருத்துவரின் பணி ஒழுங்கின்மை, வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்ட நிலையில் மருத்துவ பணியாளர்கள் பணியில் இல்லாதது போன்ற பல்வேறு விதிமீறல்களை க்ரதி ராஜ் இந்த ஆய்வின்போது கண்டறிந்தார். இதைத் தொடர்ந்து இந்த விதிமீறல் அனைத்தும் குறித்து நடவடிக்கைக்கு எஸ்டிஎம் க்ரதி ராஜ் உத்தரவிட்டார். இதனால் மருத்துவமனை பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அந்த மருத்துவமனை மருந்தகத்தில் இருந்த காலாவதி மருந்துகள் அனைத்தையும் க்ரதி ராஜ் பார்வையிடார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் நோயாளி போன்று வேடமிட்டு, பெண் ஐஏஎஸ் அதிகாரி மருத்துவமனை விதிமீறல் குறித்து நடவடிக்கை மேற்கொண்டதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்லமாட்டேன்... அலர்ட்டான ரஜினிகாந்த்!