அணை திறந்தும் பயனில்லை; நுரை கொப்பளிக்க பாயும் தென்பெண்ணை - விவசாயிகள் வேதனை!


கெலவரப்பள்ளி அணையில் இருந்து 1234 கன அடி நீர் திறப்பு

ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு விநாடிக்கு 1,234 கனஅடி நீர் வரத்தால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தென்பெண்ணை ஆற்றில் நுரைப்பொங்கி செல்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் நந்திமலை பகுதியில் தென்பெண்ணை ஆறு உற்பத்தி ஆகிறது. இந்த ஆறானது வரத்தூர் ஏரி வழியாக பெங்களூரு பெரு நகரத்தின் கழிவுநீர் கலந்தும் தென்பெண்ணை ஆற்றின் எல்லையோரமாக உள்ள தொழிற்சாலைகளின் ரசாயன கழிவு நீர் கலந்து தமிழகத்தின் கெலவரப்பள்ளி அணைக்கும் ரசாயன கழிவுகளுடன் கருமை நிறத்தில் நீர் வருகின்றது. தற்போது கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு விநாடிக்கு 1,234 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

தென்பெண்ணை கரையோரம் உள்ள 19 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையின் மதகுகள் சரிசெய்யும் பணி நடைப்பெற்று வருவதால் விநாடிக்கு 1,220 கனஅடி நீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. 1000 கன அடிக்கும் மேல் நீர் வெளியேறுவதால் கெலவரப்பள்ளி அணை மற்றும் தென்பெண்ணை ஆற்றங்கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ரசாயன நீர் கலப்பால் நுரை பொங்கி செல்லும் தென்பெண்ணை ஆறு

இதனிடையே தென்பெண்ணை ஆற்றில் கலக்கப்படும் கழிவுநீரால், துர்நாற்றம் வீசியவாறு, தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக நுரைப்பொங்கி செல்கிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றுநீர் விவசாயிகளும் பொதுமக்களும் கவலையடைந்துள்ளனர். ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நுரை பொங்கி செல்வதால் விவசாயிகள், பொதுமக்கள் வேதனை

இதையும் வாசிக்கலாமே...

x