இன்று கார்த்திகை தீபம்... எத்தனை விளக்கேற்றினால் என்னென்ன பலன்கள்?!


தமிழகம் முழுவதும் இன்று திருக்கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், ஏற்றி வழிபடுகிற ஒவ்வொரு தீபத்திலும் சக்தி குடியேறி, ஆசீர்வதிக்கிறாள் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாதத்தில், வீடுகளிலும் வாசலிலும் வரிசையாக விளக்கேற்றி வைப்பது வழக்கம். ஊர்க்கோடியில் உள்ளவர்களும் தரிசிக்கும் வகையில் மலையுச்சியில் தீபம் ஏற்றி வழிபட்டிருக்கிறார்கள். குறிப்பாக, மலையே சிவமெனத் திகழும் திருவண்ணாமலையில், மலையுச்சியில் தீபமேற்றி, அதை தரிசிக்கின்றனர் லட்சக்கணக்கான பக்தர்கள்!

பொதுவாகவே, தினந்தோறும் வீட்டின் தலை வாசல்படிகளில் சூரியோதயத்தின் போதும், சூரிய அஸ்தமனத்தின் போதும் விளக்கேற்றி வழிபடுவது எண்ணற்ற பலன்களையும் கொடுக்கும். நம்மைச் சுற்றியும், நமது இல்லத்திலும் நல்ல அதிர்வுகளைத் தரும். தேவதைகளும், அஷ்டதிக் பாலகர்களும் நம்மைக் காப்பார்கள்.

இன்று கார்த்திகை தீபத்தின் போது, திருவண்ணாமலையில் மகாதீபமேற்றப்படும் அதே வேளையில் உங்கள் இல்லங்களிலும் தீபமேற்றி வழிபடுங்கள். எத்தனை தீபங்கள் ஏற்றி வழிபடுகிறோமோ, அதற்குத் தக்க பலன்களும் புண்ணியங்களும் உண்டு.

ஒரு தீபமேற்றி வழிபட்டால், மனதில் அமைதி நிலவும். குழப்பங்கள் விலகும். ஒன்பது தீபங்களேற்றி வழிபட்டால், நவக்கிரக தோஷங்கள் விலகிவிடும்.

12 தீபங்கள் ஏற்றி வழிபட்டால், ஜென்ம ராசியில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கும். எதிர்ப்புகள் அழியும். எதிரிகள் விலகிச் செல்வார்கள்.

18 தீபங்களேற்றி வழிபட்டால், இல்லத்தில் சர்வ சக்தியும் குடிகொள்ளும். தனம் தானியம் பெருகும். குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.

27 தீபங்களேற்றி வழிபட்டால், நட்சத்திர தோஷங்கள் விலகும். 27 நட்சத்திரங்கள் மற்றும் ஒன்பது கிரகங்கள் ஆகியவற்றுக்காக சேர்த்து 36 தீபங்களேற்றி வழிபட்டால், எடுத்த காரியம் யாவும் கைகூடும். திருமணம் முதலான தடைபட்ட காரியங்கள் விரைவில் நடந்தேறும்.

48 தீபங்களேற்றி வழிபட்டால், தொழில் வளர்ச்சி பெறும். 108 தீபங்களேற்றி வழிபட்டால் நினைத்த காரியம் அனைத்தும் நடந்தேறும்.

இன்று திருக்கார்த்திகை நாளில் மாலையில் வீட்டின் வாசலிலும், பூஜையறையிலும் கோலமிட்டு அகல்விளக்குகளை ஏற்றிவைத்து இறைவனை வழிபடுங்கள். உங்கள் துயரங்கள் அனைத்தும் விலகும்.

x