மக்களுக்கு அடிமைப் பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக மருந்து கட்டுப்பாடு துறையின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்து விற்பனை நிறுவனங்களில் தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில் விதிமீறல்களில் ஈடுபட்ட மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கடந்த 6 மாதத்தில் 117 மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, அடிமைப் பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்த 6 மருந்து விற்பனையகங்களின் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மக்கள் நல்வாழ்த்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...