சாலைப்பணி நடைபெறும் நிலையில் அதுகுறித்த போதிய அறிவிப்பு பலகை வைக்கப்படாததால் சென்டர் மீடியனில் மோதி ஆம்னி பேருந்து கவிந்து விபத்துக்குள்ளான சம்பவம் வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து நேற்று இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு மன்னார்குடி லட்சுமாங்குடிக்கு தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. இன்று காலை மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் அருகிலுள்ள கதிராமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது குறுகிய இடத்தில் வைக்கப்பட்ட சென்டர் மீடியனை ஓட்டுநரால் கவனிக்க முடியவில்லை. அது குறித்து அறிவிப்பு பலகைகளும் அங்கு எதுவும் வைக்கப்படவில்லை.
அதனால் வேகமாக வந்த பேருந்து சென்டர் மீடியனில் மோதி சாலையில் ஒருபக்கமாக சாய்ந்தது. இதனால் பயணிகள் அலறித் துடித்தனர். பேருந்தை ஒட்டி வந்த ஆம்பூரைச் சேர்ந்த இம்தியாஸ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதைப் பார்த்ததும் அவ்வழியே சென்ற பொதுமக்கள் பேருந்தில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
ஓட்டுநர் இம்தியாஸ் காயங்களுடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வைத்தீஸ்வரன் கோயில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குறுகிய சாலையில் சென்டர் மீடியன் வைக்கப்பட்டிருந்ததும், போதிய அறிவிப்பு பலகைகள் இல்லாததுமே அப்பகுதியில் தொடர் விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் மீண்டும் ரெய்டு!
கோர விபத்து... லாரி மீது மோதிய ஆட்டோ... தூக்கி வீசப்பட்ட குழந்தைகள்!