குன்னூரில் 1200 பேர் 78 நிமிடங்கள் இடைவிடாது சிலம்பம் சுற்றி உலக சாதனை!


குன்னூர்: குன்னூரில் சிலம்பத்தை ஊக்குவிக்கும் விதமாக 1200 மாணவ, மாணவிகள் ஒன்றாக இணைந்து 78 நிமிடங்கள் விடாமல் சிலம்பம் சுற்றி ‘ராயல் புக்’ உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட் மைதானத்தில் தேசிய சிலம்பம் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் வஜ்ரம் விளையாட்டு மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில் சிலம்பத்தை ஊக்குவிக்கும் விதமாக 78வது சுதந்திர தினத்தை ஒட்டி 78 நிமிடங்கள் விடாமல் சிலம்பம் சுற்றி ராயல் புக் உலக சாதனைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெலிங்டன் கண்டோன்மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி வினித் லோட்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 1200 மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு 78 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி சாதனை நிகழ்த்தினர். இதில் கண்களை கட்டியும், பானைகள் மீது நின்றும் சிலம்பம் சுற்றியதும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதில் ஆண்களுக்கு இணையாக பெண்களும், மாற்றுத்திறனாளிகளும், பயிற்சி ஆசிரியர்களும் சுமார் 1200 பேர் விடாமல் சிலம்பம் சுற்றி ராயல் புக் உலக சாதனையில் இடம் பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பரதநாட்டியம், கராத்தே, கேரம் போர்டு ஓவியம், சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப் பட்டது. வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் மற்றும் கேடயங்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

x