சோகம்; 28 வயது விவசாயி தூக்கிட்டு தற்கொலை: கடன் கொடுத்தவர்கள் மீது புகார்!


விவசாயி தற்கொலை

வாங்கிய கடனைக் கட்ட முடியாததால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயம்

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் மாவட்டம் தேகாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் நாயக்(28). விவசாயியான இவர் நேற்று மாலை வீட்டில் உள்ள தகரக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், விகாஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து விசாரித்த போது விகாஸ் மற்றும் அவரது சகோதரர் ஆஷிஷ் ஆகியோர் மூன்று ஏக்கர் பண்ணையில் ஒப்பந்த முறையில் பருத்தி மற்றும் துவரை பயிரிடுவதற்காக அவர்களது உறவினர்களிடம் கடன் வாங்கியிருந்தனர். காட்டு விலங்குகளின் தாக்குதலால் பயிர்கள் சேதமடைந்தன. இதனால் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் அவர்கள் தவித்து வந்ததும் தெரிய வந்தது.

இந்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக விகாஸ் நாயக் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் புகார் செய்தனர். இதுகுறித்து கன்ஹான் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x