உரிமைத்தொகை திட்டத்தில் அதிரடி மாற்றம்... அடுத்தாண்டு காத்திருக்கிறது ஆச்சரியம்!


மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன் அடைந்தவர்கள்

தமிழகத்தில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000த்தை அடுத்த ஆண்டு முதல் மாதத்தின் துவக்கத்திலேயே வழங்கிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தபடி தமிழ்நாட்டில் இல்லத்தரசிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டது.

தங்களுக்கு உரிமைத்தொகைப் பெற தகுதியிருந்தும் வழங்கப்படவில்லை என இதுவரை 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் அவர்களில் 7 லட்சத்து 35 ஆயிரம் பயனாளிகளுக்கும், ஏற்கெனவே, வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து, மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு, நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையை கடந்த 10-ம் தேதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெண்களுக்கு பயனுள்ளதாக மாற்றும் வகையில் குடும்பத் தலைவிகளுக்கு மாத துவக்கத்திலேயே அவர்களது வங்கி கணக்கில் ரூ.1,000 வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து குடும்ப தலைவிகளுக்கு மாத துவக்கத்தில் ரூ.1,000 வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

மாத துவக்கத்திலேயே குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கினால் அந்த மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்க உபயோகமாக இருக்கும் என்பதால் மாத துவக்கத்திலேயே வழங்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மாதாமாதம் 15ம் தேதி அன்று வழங்கும் வகையில் தான் திட்டம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் ஒரு நாள் முன்னதாக 14ம் தேதி வழங்கப்பட்டது. இந்த தீபாவளியை முன்னிட்டு 10ம் தேதியே வழங்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டில் இருந்து 1ம் தேதியே வழங்கப்படும் என்பதால் திட்டத்தில் பயன்படும் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதையும் வாசிக்கலாமே...

சத்தமில்லாமல் நடந்த மகனின் பட பூஜை... கண்டுகொள்ளாத விஜய்!

x