சென்னையில் வேகமாக பரவும் புதிய வகை வைரஸ்கள் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை!


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தற்போது சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வேகமாக பரவி வருகிறது. தற்போது எச்1என்1 மற்றும் எச்3என்2 வைரஸ் பாதிப்புகள் அதிகமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை மழைக்கால பருவத்தில் சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை பொதுவானதாக கருதப்பட்டாலும் தற்போது ஏற்படும் இருமல் நீண்ட நாட்கள் நீடிக்கிறது என்பது தான் அதிர்ச்சிகரமான தகவல். சென்னை மக்களுக்கு தற்போது இருமல் அதிகரித்து வருகிறது. அதிலும் பெரும்பாலானோருக்கு இந்த இருமல் ஒரு மாதம் வரை நீடிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளில் பலர் இருமல் நீண்ட காலம் நீடிப்பதாக கூறுகின்றனர். இந்த இருமல் ஒரு மாதம் வரை நீடிக்கிறது. இருமல் பாதிப்புடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வருகிறார்கள். அவர்கள் அடிக்கடி வந்து இருமலுக்கு சிகிச்சை பெறுகிறார்கள்.

காய்ச்சல், சளி, தொண்டை வலி மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் இன்புளூயன்சா வைரஸ் சுவாசக்குழாயை பாதிக்கிறது. மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற ஒவ்வாமை பாதிப்புகள் கொண்டவர்களுக்கு இருமல் நீண்ட காலம் நீடிக்கிறது. மேலும் இருமல் கடுமையாகவும் இருக்கும். இதுபோன்ற நோயாளிகளுக்கு இருமல் 2 வாரம் முதல் ஒரு மாதம் வரை நீடிக்கலாம். ஒவ்வாமை பாதிப்புகள் இல்லாதவர்களுக்கு சளி, இருமல் போன்றவை சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும்.

இந்த பருவத்தில் இருமல் போன்ற பாதிப்புகளுடன் வரும் நோயாளிகளை நாங்கள் நீண்ட காலமாகவே பார்க்கிறோம். மேலும் சென்னையில் காய்ச்சல் பாதிப்புகளும் அதிகரித்து வருகிறது. காய்ச்சல் பாதிப்புகள் இன்னும் 2 அல்லது 3 மாதங்களுக்கு பொதுவானதுதான் என்றாலும், இப்போது பரவும் இருமல்தான் அதிக நாட்கள் நீடிக்கிறது. ஆனால் இதற்கான காரணம் முழுமையாக தெரியவில்லை. ஆனால் நோயாளிகளை பரிசோதனை செய்யும்போது வரும் முடிவுகள் பொதுவாக இன்புளூயன்சா வைரஸ் பாதிப்புகளாகவே உள்ளன.

கடந்த 3 வாரங்களாகவே இருமல் பாதிப்புடன் அதிக நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். இது பொதுவாக ஏற்படக்கூடிய வைரஸ் தொற்றுதான். ஆனால் ஒவ்வொரு நோயாளிக்கும் அவர்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலை பொருத்து பாதிப்புகள் வேறுபடுகிறது. 15 சதவீதம் முதல் 20 சதவீதம் நோயாளிகளுக்கு இருமல் நீண்ட காலம் நீடிக்கிறது. இதனால் அவர்களுக்கு காய்ச்சல் பாதிப்புகளும் ஏற்படுகிறது.

வைரஸ் நோயாளிகள்

இப்போது வைரஸ்களின் தன்மை மாறிக்கொண்டே இருக்கிறது. தற்போது எச்1என்1 மற்றும் எச்3என்2 வைரஸ் பாதிப்புகள் பரவி வருகிறது. இருமல் பாதிப்பு கொண்ட நோயாளிகள் அதிகமாக பேசக்கூடாது. எப்போதும் முக கவசம் அணிய வேண்டும். இதனால் வீடுகளில் உள்ளவர்களுக்கும், மற்றவர்களுக்கும் வைரஸ் வேகமாக பரவுவது தடுக்கப்படும். இதுபோன்ற பாதிப்பு கொண்ட நோயாளிகள் ஆக்சிஜன் அளவை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். மற்ற இணை நோய் பாதிப்புகள் கொண்டவர்கள் தங்களுக்கு காய்ச்சல், சோர்வு, தலைவலி, மூச்சுத்திணறல் மற்றும் அன்றாட செயல்பாடுகளில் பாதிப்பு இருந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். அது மூச்சுக்குழாய் அழற்சியாக மாறினால் இருமல் நீண்ட நாட்கள் நீடிக்கும்.

ஒருவருக்கு நீண்ட காலமாக இருமல் இருந்தால் போதுமான அளவு ஓய்வு எடுக்க வேண்டும். நல்ல ஊட்டச்சத்து கொண்ட உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீரை சூடுபடுத்தி வெதுவெதுப்பாக குடிக்க வேண்டும். நன்றாக தூங்க வேண்டும். கடற்கரை பகுதிகள், குளிர்ந்த காற்று வீசும் பகுதிகள், தூசி நிறைந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படி சென்றால் நிலைமை மிகவும் மோசமாகும். 2 அல்லது 3 வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால் சுயமாக மருந்து சாப்பிடக்கூடாது. மருத்துவரின் ஆலோசனையின்படி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


x