ஹாலிவுட் படப்பாணியில் நடந்த சேஸிங்... ஓட்டுநர் இல்லாமல் 100 கி.மீ தூரம் ஓடிய சரக்கு ரயில்!


சரக்கு ரயில்

ஹாலிவுட் படப்பாணியில் காஷ்மீரில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு ஓட்டுநர் இல்லாமல் 100 கி.மீ தூரத்திற்கு சரக்கு ரயில் ஓடிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

'அன்ஸ்டாப்பபிள்' திரைப்படத்தின் ஒரு காட்சி

ஹாலிவுட் படப்பாணியில் காஷ்மீரில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு 'அன்ஸ்டாப்பபிள்' என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளியானது. இதில் சரக்கு ரயில், ஓட்டுநர் இல்லாமல் சீறிப் பாயும். அந்த ரயிலை நிறுத்த நடக்கும் போராட்டத்தைப் போல காஷ்மீரில் நிஜத்திலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

காஷ்மீரின் கதுவா ரயில் நிலையத்தில் 53 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் நேற்று காலை 7.25 மணிக்கு நிறுத்தப்பட்டிருந்தது. இந்த சரக்கு ரயில் பெட்டிகளில் கருங்கற்கள், கான்கிரீட் சிலாப்புகள் ஏற்றப்பட்டிருந்தன.

சரக்கு ரயிலின் ஓட்டுநர், உதவி ஓட்டுநரின் பணி முடிந்து மற்றொரு ஓட்டுநர், உதவி ஓட்டுநர் பணிக்கு வர வேண்டும். ரயில் எஞ்சின் அணைக்கப்படாத நிலையில் பணி முடிந்த ஓட்டுநர், ஹேண்ட் பிரேக் போட மறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. புதிய ஓட்டுநர் வருவதற்குள் சரக்கு ரயில் நகரத் தொடங்கியது. சரிவான பகுதி என்பதால் அந்த ரயில் வேகமாக ஓடத் தொடங்கியது.

ஓட்டுநர் இல்லாமல் சென்ற ரயிலை செல்போனில் படம் பிடிக்கும் வாலிபர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் கதுவா ரயில் நிலையத்திலேயே சரக்கு ரயிலை நிறுத்த முயன்றனர். ஆனால். எந்த ஓட்டுநராலும் ரயிலில் ஏற முடியவில்லை. அங்கிருந்து ரயில் புறப்பட்டு சுமார் 100 கி.மீ. வேகத்தில் தண்டவாளத்தில் சீறிப் பாய்ந்தது. உடனடியாக சரக்கு ரயில் சென்ற பாதையில் இருந்த அனைத்து ரயில்களும் வேறு பாதைக்கு திருப்பி விடப்பட்டன.

அனைத்து ரயில்வே கேட்டுகளும் மூடப்பட்டு வாகனங்கள், பொதுமக்கள் தண்டவாளத்தைக் கடப்பது தடுக்கப்பட்டது. பஞ்சாபின் பதான்கோட் ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலை நிறுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தண்டவாளத்தில் மரத் தடுப்புகள் அமைக்கப்பட்டு ரயிலை நிறுத்த முயன்றனர். ஆனால் தடுப்பை உடைத்து சரக்கு ரயில் சீறிப் பாய்ந்தது.

பதான்கோட் கன்டோன்மென்ட், கன்ட்டோரி, மிர்தால், பங்களா, முகேரியன் ஆகிய ரயில் நிலையங்களிலும் மரத்தடுப்புகள், மணல்மூட்டைகள் மூலம் சரக்கு ரயிலைநிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. எனினும் ரயிலின் வேகம் கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டது. இறுதியில் பஞ்சாபின் உஞ்சி பஸ்ஸி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர்களின் இடைவிடாத முயற்சியின் காரணமாக ரயில் நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று தொடங்குகிறது திறன் மதிப்பீட்டுத் தேர்வு!

திமுக எம்எல்ஏ கொடுத்த வாக்குறுதி... போராட்டத்தைக் கைவிட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!

லண்டனில் தமிழக இளைஞர் மரணத்தில் திடீர் திருப்பம்; கதறும் பெற்றோர்!

x