மகிழ்ச்சி... இலங்கையைத் தொடர்ந்து இனி சிங்கப்பூருக்கும் கப்பலில் போகலாம்!


பயணிகள் சொகுசு கப்பல்

சென்னையிலிருந்து இலங்கை மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் சொகுசு கப்பல்கள் இயக்க திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சொகுசு கப்பல்களை இயக்கும் வகையில் சென்னை துறைமுக பொறுப்பு கழகம், 'லிட்டோரல் குரூஸ் லிமிடெட்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஐ.நாவின் பாரம்பரிய இடங்கள் சென்னை மற்றும் தமிழக பகுதிகளில் அதிகம் இடம் பெற்றுள்ளதாலும், பயணியர் விரும்பும் வகையிலான கட்டணம், சுற்றுலாப் பயணியரை நட்புடன் உபசரிப்பதாலும், சென்னை துறைமுகம் சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளது.

இந்நிலையில் பயணியர் சேவையை மேம்படுத்தும் வகையில், லிட்டோரல் குரூசெஸ் லிமிடெட் நிறுவனத்துடன், சென்னை துறைமுக பொறுப்புக்கழக தலைவர் சுனில் பாலிவால் முன்னிலையில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து திரிகோணமலை, கொழும்பு, மாலத்தீவு ஆகிய இடங்களுக்கும் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கும், 800 முதல் 1,200 பயணியரை ஏற்றிச்செல்லும் வகையில் சொகுசு கப்பல்கள் இயக்கப்பட உள்ளன.

அத்துடன், 22 - 30 பேர் பயணிக்கும் வகையிலான சொகுசு படகுகளின் இயக்கமும், அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் துவங்க உள்ளது. இதனால் சென்னை துறைமுகம் மேலும் அதிக சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் துறைமுகமாக மாறும். சுற்றுலாப் பயணிகளுக்கும் இதனால் அதிக பயனும் மகிழ்ச்சியும் அடைவார்கள் என கூறப்படுகிறது.

x